Pages

Monday, 20 April 2026

நற்பண்பு இல்லாதாரை நீங்கிடு!

 

நற்பண்பு இல்லாதாரை நீங்கிடு!

- அன்பு ஜெயா, சிட்னி

(பா வகை:  பண்ணத்தி என்ற பாடல்)

எடுப்பு

கடன்கலங்க வைத்திடுமே – கற்றிடு

கடனின்றி வாழ்ந்திட!


தொடுப்பு

நற்பண்பே இல்லாரை நண்பராய்க் கொள்ளாதே

நற்பண்பே காத்திடும் நம்வாழ்வில் நாளுமே!

 

(கடன்கலங்க வைத்திடுமே – கற்றிடு

கடனின்றி வாழ்ந்திட!)


முடிப்பு

கடன்பட்டார் நெஞ்சம் கலங்கியே தீருமே

       கடன்நீக்கி வாழ்வில் கலக்கம் தவிர்ப்பமே!

கடமையேதும் இல்லையே கற்பிலா மனைவியுடன்

       காலமும் வாழ்ந்திட கலைந்திடே உறவையே!     (1)

 

நல்லபண்பே இல்லா நண்பரை நீங்கிடு

       நல்லதோர் பெருமையும் நாடிவந்து சேருமே!

நல்லவர் சேர்க்கையால் நாளுமுன் வாழ்விலே

       நற்பயன் சேர்ந்திடும் நல்லின்பம் நிலைக்குமே!    (2)

 

(கடன்கலங்க வைத்திடுமே – கற்றிடு

கடனின்றி வாழ்ந்திட!)

---------------------------------

நல்லவரில்லா நாட்டில் துன்பமே!

 

நல்லவரில்லா நாட்டில் துன்பமே!

– அன்பு ஜெயா

பா வகை:  நொண்டிச் சிந்து – இருமுச்சீரிரட்டை

 

ஒழுக்கமிலான் உறவென்றே – ஒன்றிணைந்தால்

      ஒருபோதும் இன்பம்தான் இருக்காதே;

வழுவின்றி நன்னூல்கள் – கல்லாதார்

      வாழ்வு துன்பத்தில் ஆழ்ந்திடுமே;

இழுக்குதரும் தொழில்செய்வோர் – நட்பினில்

      இணைந்தால் துன்பமுனை அணைத்திடுமே;

வழுவில்லா நல்லோரை – விரும்பாதார்

      வாழுமிடம் சேராதே

           வாழ்ந்திடவும் எண்ணாதே!   (1)

 

ஒழுக்கமிலா உறவினரை – உதறிவிடின்

      ஒப்பற்ற நன்மையுண்டே எப்போதும்;

வழுவில்லா நூல்களையே – கற்றிடுவாய்

      வாழ்வினில் நன்மை சூழ்ந்திடுமே;

இழுக்கில்லா தொழில்போற்று – நாளும்

      இன்பமே வாழ்விலேது துன்பமே;

வழுவில்லா நல்லோர் – ஊரில்

      வாழுமிடம் சேர்ந்துவிடு

           வளமதுவும் பெற்றுவிடு!           (2)

-------------------------------

Saturday, 18 April 2026

கற்றோர் அவையில் கல்லாதவனுக்குத் துன்பமே!

 

கற்றோர் அவையில் கல்லாதவனுக்குத் துன்பமே!

--- அன்பு ஜெயா

(பா வகை:  காவடிச் சிந்து)

 

கல்வியின்றி நல்லறிவு மில்லை – குதிரைக்கும்

கல்லானைச் சுமத்தல் தொல்லை – என்றும்

       கல்வியில்லான் சொல்லின்னல்

       கல்வியின்றேல் வாழ்விலின்னல்

கல்வியே - உயர்த்தும் – உலகையே!            (1)

 

செல்வம் இல்லான் சொல்லும் – துன்பமே

செல்வம் உள்ளான்சொல் வெல்லும் – அவையில்

       கல்லான்சொல் துன்பமே

       கல்விதான் வெல்லுமே

கற்போம் – வாழ்வில் – உயர்வோம்!            (2)

--------------------------

வான் சிறப்பு

 

வான் சிறப்பு

--- அன்பு ஜெயா

பா வகை: இன்னிசைக் கட்டளை வெண்பா

 

வான்பார்த்தே வாழ்வோர்தம் வாழ்வினிலே எப்போதும்

தேன்போலப் பாய்ந்திடவே தென்மேற்கில் தோன்றியே

வான்பிளந்துப் பெய்துமே வாழ்விக்கும் தேன்மழை

நான்வணங்கி நிற்பேன் நனைந்து.

 

வான்பொய்த்தால் மக்கள்தம் வாழ்வும்தான் பொய்த்திடுமே

நான்வணங்கும் நல்லிறை நம்மையும் காத்திடும்

வான்திறக்கும் நன்றாக வாழ்வும் சிறக்குமே

வான்மீதில் நம்பிக்கை வை.

 

உலகத்தை வாழ்விக்கும் உன்னையென்னை எல்லாம்

பலகாலம் காத்தும் பயன்தருமே வானம்

இனிதான வாழ்வில் இறையருளை நம்பி

இனிமேலும் வாழ்தல் இனிது.

--------------------------------

அன்னையின் பாலமுது

 

அன்னையின் பாலமுது 

--– அன்பு ஜெயா

 

பா வகை: ஆசிரியத் துறை

(ஈற்றயலடிக் குறைந்து நான்கடியாய் வந்த ஆசிரியத் துறை)

 

இன்றைய உலகில் எம்மை ஈன்ற

அன்னையும் அன்புடன் அளித்தப் பால்தான்

என்றும் வாழ்வினில் எம்மையும்

நன்றாய்க் காத்து நலமுடன் வைக்குதே!

 

வள்ளுவர் அளித்த வான்புகழ் முப்பால்

தெள்ளியக் கருத்தைத் தேனாய்த் தருமே!

அள்ளி யணைத்தே அன்னையும்

வெள்ளமாய்த் தந்தபால் வீறுமே அளிக்குமே!

 

உன்னைக் காக்கவே உலகில் வாழ்பவள்

அன்னையே என்பதில் ஐயமும் உண்டோ

அன்னையின் பாலுமே அமுதமே

அன்னை அளித்தபால் ஆயுளை நீட்டுமே!

-------------------------

Friday, 6 February 2026

போதுமென்ற மனம் கொள்!

 

போதுமென்ற மனம் கொள்!

--- அன்பு ஜெயா

(எழு சீர் குறள்வெண் செந்துறை)

 

மனத்தினைச் சிதற விட்டிடின் அதுவும்

    மானையும் வென்றுமே ஓடும்,

மனத்தினைக் கட்டி வைத்திடின் வாழ்வும்

    மகிழ்ச்சியாய் இருக்குமே உணர்வாய்!           (1)

 

உனக்கென வேண்டும் செல்வமும் சேர்த்தே

   உள்ளமும் நிறைவினைப் பெறுவாய்

எனக்குமே இன்னும் வேண்டுமே என்றோர்

    எல்லைதான் மீறலைத் தவிர்ப்பாய்!        (2)

 

அடுத்தவர் உயர்வை அளவெனக் கொள்ளும்

    அளவிலா விருப்பமும் அழிப்பாய்!

கொடுத்தநம் இறைவன் அறிந்துமே அளித்தான்

    கொண்டிடு மனத்தினில் நிறைவே!         (3)

  

உனக்கென உரிய செல்வமும் வந்தே

    உன்னையே அடைந்திடும் அறிவாய்!

மனத்தினில் விருப்பம் பெருகவே விடாது

    மகிழ்வுடன் வாழ்கவே என்றும்!           (4)

 

போதுமே என்ற மனத்தினை வளர்த்தே

    பொன்னென வாழ்வினைப் பெறுவோம்!

ஏதுமே இலாத ஏழைகள் நலம்தான்

    இங்குமே பெற்றிட உழைப்போம்!          (5)

-------------------------

வஞ்சக ஆட்டம் துன்பமே!

 

வஞ்சக ஆட்டம் துன்பமே!

--- அன்பு ஜெயா

(பா வகை:  நாலடியால் அமைந்த இருமுச் சீரிரட்டை வியனிலைச் சிந்து.)

 

நண்பனின் துன்பத்தைக் – கண்டுமே

      நல்லுதவி புரியாதல் துன்பமே;

கண்முன் பகைவர்தம் – செருக்கினைக்

      காண்பதும் வாழ்வினில் துன்பமே;

கண்போன்ற உறவுகள் – இன்றியே

      காலம் கழித்தலும் துன்பமே;

பண்பினை இழந்துமே – பணயஆட்டம்

      பழகுவோன் வாழ்விலும் துன்பமே! (1)

 

நண்பர்கள் துயர்தனில் – தயங்காது

      நாளும் உதவிடல் வேண்டும்;

கண்களால் பகைவரின் – செருக்கினைக்

      காணாது விலகிடல் வேண்டும்;

கண்ணான உறவுகள் – நடுவிலே

      காலமும் வாழ்ந்திடல் வேண்டும்;

பண்பினைக் காத்து வாழ்வில் – என்றுமே

      பணயஆட்டம் தவிர்த்திடல் வேண்டும்! (2)

-----------------------------

Friday, 30 January 2026

சேர்ந்திணைந்து வாழ்ந்தாலே சிறப்பு - கவிதை

 

சேர்ந்திணைந்து வாழ்ந்தாலே சிறப்பு

--- அன்பு ஜெயா


(தரவு கொச்சகக் கலிப்பா)


கார்காலம் வரும்பொழுதுக் கருமுகிலும் பரவிடுமே

தேர்மீதில் வருவானே தேடியென்றன் தலைவனெனப்

பார்த்திருந்தத் தலைவிக்குப் பசலையதும் விரவிடுமே

சேர்ந்திணைந்து வாழ்வதிலே செம்மையதும் துலங்கிடுமே!        (1)

 

ஊர்கூடி இழுத்தாலே உருண்டோடும் பெருந்தேரும்

பார்போற்ற இணைந்திருந்தால் பகைதன்னை அடக்கிடலாம்

வேர்விட்டே உறவிணைந்தால் விளைந்திடுமே பெருவெற்றி

சேர்ந்திணைந்தே செலுத்தவாழ்வில் சிறப்பினையும் பெறலாமே! (2)

 

தேரோட அனைவருமே திரண்டிங்கே இழுக்கவேண்டும்

ஊரோடே ஒருமித்தே உணர்ந்துழைத்தல் சிறப்புறுமே

வேரோடிப் பயிர்வளர்ந்தால் விளைச்சலுமே பெருகிடுமே

ஊரோடு நலம்பெறவே ஒருமித்தே உழைத்திடுவோம்!           (3)

 

உரிமையினைப் அடைந்திட்டோம் ஒருங்கிணைந்துப் பொருதுமிங்கே

உரிமையினைப் பறித்திடவே ஒருக்காலும் இடமளியோம்

எரிமலையாய் வெடித்திடுவோம் எதிர்வந்தோர் நடுங்கிடவே

உரிமையுடன் இணைந்திங்கே உயர்ந்திடுவோம் அனைவருமே!     (4)

----------------------------------  

இரக்கமும் உன்னை ஏமாற்றலாம் - கவிதை

 

இரக்கமும் உன்னை ஏமாற்றலாம்.

பா வகை: எழுசீர் குறள்வெண் செந்துறை

 

இரக்கம் தானே எல்லோர் மனத்தில்

     இயல்பாய் உள்ள நற்குணமே!

பரந்து விரிந்த இயல்பைச் சிலரும்

     பண்பே இன்றி ஏய்ப்பதேனோ!    (1)

 

ஏய்ப்போர் எங்கும் இருப்பர் எனினும்

    ஏழை எளியோர் உள்ளனரே,

ஆய்ந்தே அறிவ தெப்படி என்றே

    அறிவுக் கெதுவும் எட்டவில்லை!    (2)

 

குழந்தைக் கையில் ஏந்தி நின்றே

    குறையைச் சொல்வோர் நிலைதன்னை

குழந்தை மனமும் பெற்ற மாந்தர்

    குறையாய்க் காண்ப தெங்ஙனமோ?    (3)

 

அறிவோம் இங்கே ஏய்த்தும் பிழைப்போர்

    அளவே இன்றி இருப்பாரே

அறிந்தும் இரக்கம் என்னும் உணர்வும்

   அலையாய்ப் பாய்ந்தும் வருகிறதே!        (4)

 

கல்லாய் உள்ளம் கடவுள் படைத்தால்

    கடந்தே செல்லும் வழியுண்டே

கல்லில் ஈரம் கசியப் படைத்தக்

    கடவுள் தன்னைப் பழித்திடுவோம்!        (5)

 ----------------------