Pages

Monday, 1 June 2026

மெய்யறிஞர்களைத் துன்பங்கள் நெருங்காது!

 

மெய்யறிஞர்களைத் துன்பங்கள் நெருங்காது!

அன்பு ஜெயா

பா வகை:  ஏலப் பாட்டு என்ற சிந்து பாடல்.

 

காற்றினிலே தனையிழந்தே கண்டயிடம் பறக்கும்

ஆற்றலுமே இல்லாத அத்துரும்பென் செய்யும்;

கற்றூணோ வலிமையினால் காற்றினையே எதிர்க்கும்

கற்றூணின் வலிமையினைக் காற்றென்ன செய்யும்;

கற்றறியா மக்களையே காலமெலாம் அழுத்தி

நற்பொறுப்பு பெற்றிடுவர் நாட்டினிலே சிலரும்;

கற்றவரும் எதிர்வந்தால் கண்முன்னே தோன்றார்

பெற்றசெல்வம் காத்திடவே பேசாரே அவரும்;

உற்றபுலன் ஐந்துமிங்கே உருக்கிடுமே சிலரை

நற்றறிவு பெற்றோரை நாடாவே இவையும்;

ஏலேலோ! ஐலசா ஏலேல ஏலேலலோ!

--------------------------

சினத்தை அடக்குவதே சிறந்த குணம்!

 சினத்தை அடக்குவதே சிறந்த குணம்!

(பா வகை: வேற்றின உடுக்கைப் பாட்டு என்ற சிந்து பாடல்)

--- அன்பு ஜெயா


கரையொன்று நம்மையெலாம்

காத்திடுமே வெள்ளத்தின்

கடுமையுமே தாக்கிடாதே!

கரைதானே வெள்ளத்தின்

கடுஞ்சினமும் அழித்திடாமல்

காவலுமே புரிகின்றதே!

கரைதாண்டி வெள்ளமதும்

கடந்திடுதல் அரிதாகும்

காத்திடுதல் அதன்பண்பே!

கரைபோன்றே உள்ளமதும்

கடுஞ்சினத்தை எந்நாளும்

காத்திடுதல் சிறப்பன்றோ!

கடுஞ்சினமும் வெளிப்படாது

காலமெல்லாம் அமைதியினைக்

காத்திடுதல் பெருமையன்றோ!

கடுஞ்சினத்தை அடக்குவோனே

களத்தினிலே வெற்றிதனைக்

காலமெல்லாம் காண்பானே!

--------------------- 

-