Pages

Monday 21 April 2014

கம்பனின் உவமைகள் - 3 : வெள்ளப் பெருக்கும் விலைமகளும்

கம்பனின் உவமைகளில் சில துளிகள் - 3

- வெள்ளப் பெருக்கும் விலைமகளும் -

-    அன்பு ஜெயா, சிட்னி

அவையடக்கத்தில் இமயத்தின் உச்சிக்குச் சென்ற கம்பன் அங்கு பெய்த மழையைப் பார்க்காமல், அதன் அழகைப் பார்த்து சுவைக்காமல் இருந்திருப்பானா? இமய மலையின் மீது மழை பெய்து கொண்டே இருக்கிறது. அதனால் நீர் பெருக்கெடுத்து, அது மலையின் உச்சியையும், இடைப் பகுதியையும், அடிப் பகுதியையும், ஆரத் தழுவிக்கொண்டு வேகமாக ஓடி வருகின்றது. அப்படி ஓடி வருகையில் அம்மலையில் விளைந்துள்ள பொருட்களைத் தன்னகத்தே ஏந்திக்கொண்டு கீழே வந்த பின்னர், அந்தப் பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு அவை விளைந்த மலையிலிருந்து  விரைவாக விலகி வெகு தூரம் சென்றுவிடுகிறது. அதேபோல, ஒரு விலைமகளும், காமுகனின் உச்சி முதல் பாதம் வரைத் தழுவி அவனுக்கு இன்பம் கொடுத்துவிட்டு, பின்னர் அவனிடம் உள்ள பொருட்களையெல்லாம் பறித்துக்கொண்டு அவனை விட்டு விரைந்து ஓடிவிடுகின்றாள் என்று கம்பன், காமுகனுக்கு மலையையும், காமுகனின் செல்வத்தை மலையில் விளைந்த பொருட்களுக்கும், வெள்ளப் பெருக்கினை விலைமகளுக்கும் ஒப்பிட்டுக் கூறுகின்றான்.

கம்பனின் அந்தப் பாடல்:

தலையும் ஆகமும் தாளும் தழீஇ, அதன்
நிலை நிலாது, இறை நின்றது போலவே,
மலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால்,
விலையின் மாதரை ஒத்தது, அவ் வெள்ளமே.”

                 (பாலகாண்டம், ஆற்றுப்படலம் – 18)

(உவமைகள் தொடரும்)


2 comments:

  1. வாழ்த்துக்கள் அன்பு ஜெயா சார்.
    இந்த தளத்துக்குள் சென்று பாருங்கள் -

    http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisom-3.html




    ReplyDelete
    Replies
    1. நன்றி சொக்கன் அவர்களே.

      Delete

உங்கள் கருத்துக்கள்: