Pages

Wednesday 23 July 2014

சங்க இலக்கியத் தூறல் - 4: உள்ளத்தில் ஊடுருவி நிற்கும் காதல்

சங்க இலக்கியத் தூறல் - 4

உள்ளத்தில் ஊடுருவி நிற்கும் காதல்
                  - அன்பு ஜெயா, சிட்னி


 ஒரு தலைவனும் தலைவியும் காதல் வயப்பட்டு, அடிக்கடி சந்தித்து வாழ்ந்து வருகின்றார்கள். நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகி ஓடின. களவொழுக்கம் என்று கூறப்படும் இந்த நிலையிலிருந்து வாழ்க்கையின் அடுத்த கட்டமான மணவாழ்விற்குள் நுழைவதற்கான தருணம் வந்துவிட்டது என்று தலைவன் முடிவு செய்தான். அவன் ஆசையைத் தலைவியிடம் கூறினான். தலைவிக்கும் அவனைத் திருமணம் செய்துகொள்ள உடன்பாடு இருந்தது. ஆனால், அவர்களுடைய ஆசைக்கு அவர்களுடைய பெற்றோர்களின் சம்மதம் கிடைப்பதாகத் தெரியவில்லை.



இவ்வாறு களவொழுக்கத்தில் வாழ்கின்ற காதலர்கள் கற்பு நெறியான மணவாழ்க்கையைத் துவக்கப் பெற்றோர் ஆதரவு கிடைக்காததால் தலைவன் தலைவியைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு வேறு ஓர் ஊரில் வாழ விரும்பினான். தன்னை மணக்கப் போகிறவன் அழைக்கின்றான் என்பதால் தலைவியும் தன் பெற்றோர்களைப் பிரிந்து தலைவனுடன் செல்வதற்கு ஒப்புக்கொண்டாள். அவ்வாறு இவர்கள் செல்வதற்கான நாள், நேரம், இடம் குறித்துத் தலைவியின் தோழியின் மூலம் தலைவன் அறிவித்திருந்தான். குறித்த அந்த நாளில் தோழி தலைவியை தலைவனிடம் பாதுகாப்பாக ஒப்படைப்பதற்காக அழைத்து வந்தாள்.

சிறுவயது முதல் தான் ஒன்றாக ஓடி ஆடி திரிந்த தோழியான தலைவியைப் பிரியவேண்டிய தருணம் வந்ததை நினைத்து தோழி வருந்தினாள். அதே சமயம் தன் நண்பர்கள், உறவினர்கள், மற்றும் தெரிந்த அனைவரையும் பிரிந்து தலைவனை மட்டுமே நம்பிச் செல்கின்ற தலைவிக்கு என்ன பாதுகாப்பு உள்ளது என்று எண்ணிக் கலங்கினாள். மலருக்கு மலர் தாவுகின்ற வண்டினைப் போன்ற ஆண்மக்களின் சுபாவமும் அவள் மனக்கண்களில் தோன்றுகின்றது. அதன் விளைவாக தலைவனிடம் தலைவியை ஒப்படைத்து விட்டு அவனிடம் தன் எண்ணத்தையும் வேண்டுகோளையும் தெரிவிக்கின்றாள்.

 “மருதநிலத்தைச் சேர்ந்த தலைவனே! உன்னையும் உன் வார்த்தைகளையும் மட்டுமே நம்பித் தலைவி உன்னோடு வருகின்றாள்.  குறித்த நேரத்தில் நீ இந்த இடத்திற்கு அவளை அழைத்துச் செல்ல வந்ததிலிருந்து வார்த்தை தவறாத ஆண்மகன் நீ என்று தெரிகின்றது. இன்று போல் என்றும் அவளைக் கண்ணும் கருத்துமாக நீ பாதுகாக்க வேண்டும்.

“இப்போது நிமிர்ந்து உயர்ந்து நிற்கின்ற அவளது மார்பகங்கள் தளர்ந்து சாய்கின்ற காலத்திலும், இன்று கரிய நிறத்தோடு அவள் மேனியின் மேல் தவழுகின்ற நீண்ட கூந்தல் நரைத்துப்போகும் காலத்திலும் கூட நீ இவளைக் கைவிடாது அன்பு பாராட்ட வேண்டும்.

“பல வகைகளாலும் அழகு செய்யப்பட்ட தேர்கள் பலவற்றை தம்மிடம் வைத்துள்ள சோழ மன்னர்கள் கொங்கு நாட்டவரை வெல்வதற்காகச் செய்த போரில் ‘பழையன்’ என்பவன் தானைத் தலைவனாக இருந்தான். அவன் எறிந்த வேல் பிழைத்து எப்போதும் குறி தப்பியது இல்லை. அதைப்போல, உன்னை மட்டுமே நம்பி உன்னுடன் வருகின்ற தலைவியை உன் வார்த்தைகள் பிழையாமல், எப்போதும், எந்த நிலையிலும் நீ அவளைப் பிரியாமல் காப்பாற்ற வேண்டும்,” என்று தோழி தலைவனிடம் வேண்டினாள்.

இவ்வாறு உடலின் தோற்றம் கண்டு பிறக்கின்ற காதலைவிட, உள்ளத்தில் ஊடுருவி நிற்கும் காதலே சிறந்தது என்று கருத்தினையும், தலைவியின் வாழ்வு சிறப்பாக அமைய வேண்டுமென்ற உண்மையான தோழியின் துடிப்பையும், நல்லெண்ணத்தையும், சங்க காலப் புலவரான குடவாயிற் கீரத்தனார் பின் வரும் பாடலில் வெளிப்படுத்துகின்றார்:

அண்ணாந் தேந்திய வனமுலை தளரினும்
பொன்னேர் மேனியின் மணியின் தாழ்ந்த
நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
நீத்தல் ஓம்புமதி பூக்கேழ் ஊர
இன்கடுங் கள்ளின் இழையணி கொடித்தேர்
கொற்றச் சோழர் கொங்கர்பு பணீஇயர்
வெண்கோட் டியானைப் போஒரு கிழவோன்
பழையன் வேல்வாய்த் தன்னநின்
பிழையா நன்மொழி தேறிய இவட்கே.
                                 (நற்றிணை, 10:1-9.)

திணை: பாலை

துறை:  உடன்போக்கும் தோழி கூறியது


அருஞ்சொற்பொருள்: அண்ணாத்தல் – நிமிர்தல், வனம் – அழகு, கடுங்கள் –  முற்றிக் கடுப்பு ஏறிய கள், தேறுதல் – தெளிதல்.


Sunday 20 July 2014

கம்பனின் உவமைகள் 13 - அயோத்தி மக்களின் கல்விச்சிறப்பு

கம்பனின் உவமைகளில் சில துளிகள் – 13

அயோத்தி மக்களின் கல்விச்சிறப்பு 
    - அன்பு ஜெயா, சிட்னி

அயோத்தி மாநகர் வாழ் மங்கையரின் சிறப்பைக் கூறிய கம்பனிடம், அங்குள்ள மங்கையர் மட்டும்தான் சிறப்புடையவர்களா கம்ப நாடரே என்று கேட்டேன். அதற்குக் கம்பன், அயோத்தி வாழ் மக்கள் அனைவரும் சிறப்பு வாய்ந்தவர்கள்தான். ஏன், அம்மாநகரமும்கூடச் சிறப்பு வாய்ந்ததுதான் என்று விளக்கினான். கம்பன் என்ன சொன்னான் என்று கேளுங்களேன்.



அயோத்தி மாநகர், ஒரு விதை முளைத்துப் பூமியிலிருந்து மேலே எழுந்து வருவதைப்போல, கல்வியில் மேலோங்கி வளர்ந்து இருந்ததாம். மரத்தில் வலிமையான கிளைகள் வளர்ந்து பரவுவதுபோல மக்களிடம் எண்ணற்ற நூல்களின் கேள்வி அறிவு பெருகி வளர்ந்ததாம்.  அந்தக் கிளைகளில் இலைகள் தழைத்து வளருவதைப்போல கல்வியின் பயனால் மக்களிடம் நல்ல குணங்கள் நிறைந்து இருந்தனவாம். அவ்வாறு வளருகின்ற மரக்கிளைகளில் அரும்புகள் அரும்புவதுபோல எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் குணம் அயோத்தி மக்களிடம் அதிகமாகக் காணப்பட்டதாம். அந்த அரும்புகள் மலர்வதுபோல், அயோத்தியில் அறச்செயல்கள் பெருக ஆரப்பித்தனவாம். அச்சிறப்புகள் அனைத்தும் அங்கே இருந்ததால், பழங்கள் பழுத்து செழிப்பதாப்போல அயோத்தி மக்களிடம் போகம் என்னும் இன்ப அனுபவம் பெருகி, அயோத்தி நகர் ஒரு பழுத்த மரத்தைப்போல சிறந்து விளங்கியது என்று கம்பன் விளக்கிக் கூறினான்.

கம்பனின் அந்தப் பாடல்:

ஏகம் முதல் கல்வி முளைத்து எழுந்து, எண் இல் கேள்வி
ஆகும் முதல் திண் பணை போக்கி, அருந் தவத்தின்
சாகம் தழைத்து, அன்பு அரும்பி, தருமம் மலர்ந்து,
போகங் கனி ஒன்று பழுத்தது போலும் அன்றே.

        (பாலகாண்டம், நகரப் படலம் பாடல் 75, நூல்பாடல் - 168)

(ஏகம் முதல் – ஒரு வித்து; பணை – கிளை; சாகம் – இலைகள்; போகம் – இன்பம், நில அனுபவம்)

இந்தப் பாடலில் கம்பன் கல்வியை ஒரு விதைக்கும், கேள்வி அறிவைக் கிளைகளுக்கும், நல்ல குணங்களை இலைகளுக்கும், அன்பை அரும்புக்கும், அறச்செயல்களை மலருக்கும், இன்ப அனுபவத்தைப் பழத்துக்கும் ஒப்பிட்டுக் கூறுகின்றான்.

கல்வியால் அடக்கம்வருகிறது. அடக்கத்தால் நல்வாழ்வு கிடைக்கிறது. அவ்வாழ்வில் நல்ல வழிகளில் பொருள் சேருகிறது. அப்பொருளால் தருமம் செய்ய முடிகிறது. அந்த தருமத்தால் போகம் என்னும் இன்ப அனுபவம் கிடைக்கிறது என்று இப்பாடலுக்குப் பொருள் கூறுகிறார்கள் உரையாசிரியர்கள்.

கொசுறு 1: பூவின் 6 பருவங்கள்/நிலைகள் – அரும்பு, முகை, போது, மலர், வீ, செம்மல்.
கொசுறு 2: எட்டு வகையான போகங்கள்: பெண், ஆடை, அணிகலன், உணவு, தாம்பூலம், நறுமணப்பொருள், பாட்டு, பூம்படுக்கை.

                              (உவமைகள் தொடரும்)

Saturday 5 July 2014

கம்பனின் உவமைகள் - 12 : அயோத்தி மாநகர் வாழ் மங்கையர்

கம்பனின் உவமைகளில் சில துளிகள் - 12

அயோத்தி மாநகர் வாழ் மங்கையர்
                     - அன்பு ஜெயா, சிட்னி

அயோத்தியின் அழகை வருணித்த கம்பன், இப்போது அங்கு வாழ்கின்ற மங்கையர் பற்றி ஏதோ சொல்வதற்கு அழைக்கிறான். வாருங்கள் கேட்போம்.

அயோத்தியில் வாழும் பெண்களை மூன்று வகைப்படுத்திக் கூறுகிறான் கம்பன். பருவம் நிரம்பாத பெண்கள், பருவ மங்கையர் மற்றும் பருவம் முதிர்ந்த மங்கையர்.



கூந்தலை வாரி முடிக்கக்கூட முடியாத இளம் பெண்களின் குதலைச் சொற்கள் புல்லாங்குழலில் இருந்து வருகின்ற இனிய இசையைப் போல இருக்குமாம்.

மங்கைப் பருவத்து மகளிரது மழலைச் சொற்கள் மகர யாழின் கீதத்தை ஒத்திருக்குமாம் (கம்பா, பருவ மங்கையிரின் சொற்கள் மழலையா – சரியான ஆளப்பா நீ!!!).

பருவம் முதிர்ந்த மகளிரது இனிய சொற்களாகிய இன்னிசை, கள் விற்பவர்களின் சேரியிலே பாடுகின்ற கூத்தர்களின் பாட்டின் இசையை ஒத்திருக்குமாம்.

கம்பனின் அந்தப் பாடல்:

குழல் இசை மடந்தையர் குதலை, கோதையர்
மழலை, அம் குழல் இசை; மகர யாழ் இசை,
எழில் இசை மடந்தையர் இன்சொல் இன் இசை
பழையர்தம் சேரியில் பொருநர் பாட்டு இசை.

           (பாலகாண்டம், நகரப் படலம், பாடல் - 136)

 
பெண்களின் பருவங்களான பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்ற ஏழு பருவங்களையும் மூன்றினுள் அடக்கிவிட்டான் கம்பன். ஒரு வேளை அவற்றிற்கான உவமைகள் அவனுக்குக் கிடைக்கவில்லையோ?! அவன் திறமையே திறமைதான்.

     (உவமைகள் தொடரும்)