Pages

Monday 28 March 2016

தமிழிலக்கியத்தில் மதுரை


தமிழிலக்கியத்தில் மதுரை

--- அன்பு ஜெயா

(மதுரை மீனாட்சி கல்லூரி, 25, 26 பிப்ரவரி 2016-ல் நடத்திய 'இலக்கியப் பதிவுகளில் மதுரை" பன்னாட்டுக் கருத்தரங்கு மலரில் வெளியிடப்பட்ட கட்டுரை)

முன்னுரை

நான்மாடக் கூடலாம் மதுரை மாநகருக்கும் தமிழிலக்கியத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்திருக்கிறது. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த நகர் மதுரை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமின்றி, தமிழிலக்கியத்திற்குப் பல பாடல்களை இயற்றி தமிழ்ச்சேவை புரிந்த புலவர்கள் மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார், மதுரைக் கணக்காயனார், மதுரைக் காமக்கண்ணி நப்பாலத்தானர், மதுரைக் கூத்தனார், மதுரை வேளாசன் போன்று ஏறத்தாழ 35 புலவர்கள் தங்கள் பெயரில் மதுரையைக் கொண்டுள்ளனர். அதனால், இவர்களில் பெரும்பாலோரைத் தமிழுலகுக்குத் தந்த பெருமை மதுரையைச் சாரும் என்று எண்ணத் தோன்றுகிறது. மதுரை என்றால் முதலில் நினைவுக்கு வருவது அருள்மிகு மீனாட்சி அம்மனும் வைகை நதியும்தான். அந்தச் சிறப்பினையும், அதுபோன்று மதுரையின் பன்முகச் சிறப்புகளைத் தன்னுள்ளே தாங்கி நிற்கும் பாடல்கள் பல பண்டை இலக்கியங்களில் காணப்படுகின்றன. அவற்றை அனைத்தையும் எடுத்துரைப்பதென்பது, கம்பன் கூறுவதுபோல், பாற்கடலினை தன் நாவினால் நக்கியே குடித்திட எண்ணிய பூனையின் நிலையை ஒக்கும். அதனால், மதுரையின் சிறப்பைத் தன்னுள்ளே அடக்கிவைத்திருக்கும் சில இலக்கியப் பதிவுகளை மட்டும் உற்றுநோக்குவோம். 



மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

மதுரையம்பதியில் உள்ள வயல்களில் மீன்கள் துள்ளி விளையாடும் செழிப்பு பற்றியும், மதுரை தமிழ் வளர்த்தப் பெருமை பற்றியும் உரைக்கும் பாடல்:

முயல்பாய் மதிக்குழவி தவழ்சூல் அடிப்பலவின்
.....................................................................................................
கயல்பாய் குரம்புஅணை பெரும்பணைத் தமிழ்மதுரை
கற்பக அடவியில் கடம்பாடு அடவிப்பொலி
கயல்கண்நா யகிவருகவே.    
(மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், வருகைப் பருவம், 55)

பொருள்: கயல்மீன்கள் பாய்கின்ற, வரப்புகள் மிகுந்த பெரிய வயல்களை உடைய தமிழ் வளர்த்த மதுரையின் காவலனான பாண்டியன் மகளே வருக.  மதுரையில் விளங்குகின்ற மீனாட்சி அம்மையே வருக.

பரிபாடல், பரிபாடற்றிரட்டு

மதுரை மாநகரை உலகனைத்துடனும் ஒப்பிட்டு அதன் சிறப்பைக் கூறும் ஒரு பாடல்:

உலகம் ஒருநிறையாத் தானோர் நிறையாப்
புலவர் புலக்கோலால் தூக்க-உலகனைத்தும்
தான்வாட வாடாத தன்மைத்தே தென்னவன்
நான்மாடக் கூடல் நகர்.      (பரிபாடற்றிரட்டு ஆறாம் பாடல்)

பொருள்: உலகனைத்தையும் ஒரு தட்டிலேயும் மதுரையை ஒரு தட்டிலேயும் வைத்து, புலவர்கள் அறிவென்னும் தராசில் வைத்துப் பார்த்தனர். அதில், உலகம் அனைத்தையும் வைத்திருந்த தட்டுதான் எடை குறைவானதால் மேலே சென்றது.  அப்படிப்பட்ட பெருமை உடையது மதுரை மாநகரம்.
மதுரை மாநகரின் புகழ் என்றும் நீடித்து நிற்கும் என்று கூறும் பாடல்:

தண்தமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம்
நின்று நிலைஇப் புகழ் பூத்தல் அல்லது
குன்றுதல் உண்டோ மதுரை கொடித்தேரான்
குன்ற முண்டாகும் அளவு.    (பரிபாடற்றிரட்டு எட்டாம் பாடல்)

பொருள்: தமிழ்மொழியைக் காக்கும் வேலியாக உள்ள தமிழ்நாட்டின் இடமெல்லாம் தன் புகழ் நிலைக்குமாறு விளங்கிய பாண்டியனுக்குரிய திருப்பரங்குன்றம் உள்ள காலம் வரை மதுரையின் புகழ் குறையாது.

வைகையாற்றினை மதுரைக் குடிமக்கள் எவ்வளவு விரும்பி வரவேற்கின்றனர் என்பதை அறிவுறுத்தும் ஒரு பாடல்:

வான் ஆர் எழிலி மழை வளம் நந்தத்,
தேன் ஆர் சிமைய மலையின் இழிதந்து,
நான்மாடக் கூடல் எதிர்கொள்ள, ........
(பரிபாடற்றிரட்டு முதற்பாடல் திருமால், 1-3)

பொருள்: மேகங்கள் மழைபொழிய, அந்த மழை நீரானது மலைகளிலிருந்து இறங்கி வருகையில் மதுரை மாநகர மக்கள் எதிர்கொள்கின்றனர் என்று மதுரையைக் குறிப்பிடும் பாடல்.

வைகையாற்றுப் புதுப்புனலின் அழகைச் சித்தரிக்கும் ஒரு பாடல்:

மாநிலம் தோன்றாமை மலிபெயல் தலைஇ
ஏமநீர் எழில்வானம் இகுத்தரும் பொழுதினான்
நாகநீள் மணிவரை நறுமலர் பலவிரைஇக்
காமரு வையை கடுகின்றே கூடல்;.......
(பரிபாடற்றிரட்டு இரண்டாம் பாடல் வையை, 1-4)

பொருள்: இந்தப் பூமியன் நிலப்பகுதியையே காணமுடியாத அளவுக்கு மழை பொழிந்தது. அந்த மழைநீரானது நாகமரங்கள் ஓங்கி உயரமாக வளர்ந்திருக்கும் நீலமணிபோல விளங்கும் மலைச்சாரல் பகுதிகளின் வழியாக இறங்கி ஓடி வந்தது. அப்படி வருகையிலே நறுமலர்கள் பலவற்றையும் தன்பால் சேர்த்துகொண்டு, அழகு பொருந்திய வையையாற்றின் வழியாக வந்து கூடல் மாநகரை அடைந்தது.

அவ்வாறு கூடல் நகரை அடைந்த வையையின் புதுப்புனலை வரவேற்க மதுரை வாழ் மக்கள் ஆவலுடன் கூடுகின்ற காட்சி:

தகரமும் ஞாழலும் தாரமும் தாங்கி
நளிகடல் முன்னி யதுபோலும் தீநீர்
வளவரல் வையை வரவு;
வந்து மதுரை மதில்பொரூஉம் வான்மலர்த்தாய்
அந்தண் புனல்வையை யாறெனக் கேட்டு;
மின்னவிர் ஒளியிழை வேயு மோரும்,
................................................................................... (பரிபாடல் 12:6-32)

பொருள்: வையை ஆறானது தகரம், ஞாழல், தாரம் ஆகிய மரங்களைத் தாங்கிக்கொண்டு வந்தது . அப்படி வருகின்ற வையையின் வரவானது கடல் நீர் பொங்கி எழுந்து வருவது போல இருந்தது. இந்தப் புதுவெள்ளத்தைப் பற்றி கேள்விப்பட்டு  மதுரையில் வாழும் பலதரப்பட்ட மக்கள் அதனைக் காண்பதற்காக வையையை நோக்கிச் செல்லலாயினர்.
வைகையற்றின் போக்கிற்கு அணையிடுவதையும் காதலர்களின் உடன்போக்கைக் தடுப்பதையும் ஒப்பிட்டுக் கூறும் ஒரு பாடல்:

கடையழிய நீண்டகன்ற கண்ணாளைக் காளை
படையொடுங் கொண்டு பெயர்வானைச் சுற்றும்
இடைநெறித் தாக்குற்ற தேய்ப்ப, அடல் மதுரை
ஆடற்கு நீர் அமைந்தது யாறு!       (பரிபாடல் 11:46-49)

பொருள்: தன் காதலியைக் காளையானவன் தன்னுடன் உடன்போக்கில் அழைத்துச் சென்றான். அதையறிந்த தலைவியின் சுற்றத்தார், இடைவழியில் அவர்களின் போக்கைத் தடுத்து நிறுத்தினர். அதைப்போலவே, மதுரை மக்கள் அணையிட்டுத் தடுத்து நிறுத்தியதால் வையை ஆறும் மக்கள் நீராடிக் களிப்பதற்கு ஏற்றதாயிற்று.

புறநானூறு

மதுரையின் மாடமாளிகைகள் குறித்தும் மன்னரின் பெருமையைக் குறித்தும் உரைக்கும் பாடல்:
கடும்பின் அடுகலம் நிறையாக நெடுங்கொடி
.................................................................................................
மாட மதுரையும் தருகுவன்; ................................    (புறநானூறு, 32: 1-5)

பொருள்: சோழன் நலங்கிள்ளி இரக்கம் மிகுந்தவன். விறலியர் பூவிலை தருமாறு வேண்டினால், மாடமாளிகைகள் விளங்கும் மதுரை நகரையே தரும் இயல்பினன்.

 கலித்தொகை

பரத்தையின் வீடு சென்று திரும்பும் தலைவனின் மார்பில் நகக்குறிகள் உள்ளதைத் தலைவி பார்க்கிறாள். தலைவனோ குதிரை ஏறி வந்தேன் என்று கூறுகிறான். அதைக்  கேட்ட தலைவி, பரத்தையரைக் குதிரையாக உருவகித்து பின்வரும் சொற்களைக்  கூறுகின்றாள். இப்பாடல், மதுரை மாநகர் வாழ் மக்களின் வாழ்வியலில் ஒரு பகுதியான துப்புரவைப் பற்றி கூறுவதாகவும் அமைந்துள்ளது.:

சேகா! கதிர்விரி வைகலின் கைவாரூஉக் கொண்ட
மதுரைப் பெருமுற்றம் போலநின் மெய்க்கண்
குதிரையோ வீறி யது?         (கலித்தொகை, 96:22-24)

பொருள்: “வீரனே! கதிரவன் தனது ஒளிக்கதிர்களை விரிக்கத் தொடங்கும் காலை நேரத்தில், மதுரை நகரில் மகளிர் சாணம் இட்டு வாரிப் பெருக்கிய வீட்டு முற்றம்போல, உன்னுடைய மேனியில் அந்தக் குதிரைதான் கோடு கீறியதா?”

முத்தொள்ளாயிரம்

மதுரை மாநகரின் மாடமாளிகைகளைப் பற்றியும், பாண்டிய மன்னன் அரண்மனையின் பாதுகாவல் பற்றியும் எடுத்துரைக்கும் ஒரு பாடல்:

அறிவார் யார் யாமொருநாள் பெண்டிரேம் ஆகச்
செறிவார் தலைமேல் நடந்து – மறிதிரை
மாடம் உரிஞ்சும் மதுரையார் கோமானைக்
கூட ஒரு நாள் பெற.                     (முத்தொள்ளாயிரம், 66)

பொருள்: வைகை ஆற்றில் எழும் அலைகளைத் தடுக்கும் உயர்ந்த மாடங்கள் நிறைந்த மதுரையை ஆளும் மன்னன் பாண்டியனைச் சேர்ந்து மகிழ ஒரு நாளைக் குறிக்க யார் இருக்கிறார்கள்? அவனுக்கு நான் மனைவியாக ஆவதற்கு, கட்டுக் காவல் மிகுந்த பாண்டியன் அரண்மனைத் தலைவாசலைக் கடந்துபோய் என் ஆவலை அவனிடம் சொல்லும் வழிவகை அறிந்தவர்கள் யார் இருக்கிறார்கள்?

முடிவுரை      

மதுரையின் சிறப்பினைப் பதிவு செய்துள்ள தமிழிலக்கியங்கள் மேலே குறிப்பிட்டவை மட்டுமின்றி பல உள்ளன. இளங்கோவடிகள் மதுரையை பின்னணியாக வைத்து ஒரு காண்டமே எழுதியுள்ளார். மதுரை நகரின் அமைப்பு, அதன் வளம், செல்வச்செழிப்பு, மக்கள் வாழ்வு, அங்காடிகள் பற்றிய செய்திகளை தன்னகத்தே கொண்டுள்ளது பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக் காஞ்சி. பெரிய புராணம், மணிமேகலை போன்ற நூல்களும் மதுரையின் சிறப்பைப் பதிவு செய்துள்ளன.


உசாத்துணை:

1.  பேராசிரியர் சி. இலக்குவனார், பழந்தமிழ்’, இலக்குவனார் இலக்கிய இணையம், 2009:114-115.
2.   புலியூர் கேசிகன், பரிபாடல் – தெளிவுரை.
3.   வ. த. இராமசுப்பிரமணியம், புறநானூறு – தெளிவுரை 
4.   சுப. அண்ணாமாலை, கலித்தொகை – உரை
5.   பேராசிரியர் பு. சி. புன்னைவனநாத முதலியார், மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ் – உரை.
6.   ஞா. மாணிக்கவாசகன், முத்தொள்ளாயிரம் விளக்க உரை

-----------------------------------------------------


Monday 15 February 2016

சங்க இலக்கியத் தூறல் 11 - அருவி நீராடிய அணங்கு



அருவி நீராடிய அணங்கு
--- அன்பு ஜெயா, சிட்னி


எங்கோ பெய்த மழையின் நீரையெல்லாம் தன்னகத்தே ஏந்திக்கொண்டு யாரும் தன்னைப் பிடித்து தன் ஓட்டத்திற்கு அணை கட்டிவிடுவார்களோ என்ற பயத்துடன் வேகவேகமாக ஓடி வருகிறாள் அந்த நதியென்னும் பெண்ணாள். அவள் பாய்ந்து வருகின்ற அழகை ரசிக்காத மானிடரும் உண்டோ இவ்வையகத்தில்! அப்படிப் பாய்ந்து வருகின்ற அவள், அதோ அந்த அழகிய மலையிலிருந்து அருவியாகத் தரையிறங்கி வருகின்றாள். அதுவும் ஓர் அழகுதான். அந்த அழகையும் தோற்கடிக்கும் அழகுடைய என் காதலியோ தன் தோழிகளுடன் அருவியிலே நீராடிக் கொண்டிருக்கின்ற காட்சி என்னை கற்பனையின் உச்சிக்கே அழைத்து செல்கிறது. அந்த அழகொடு அழகு சங்கமிக்கும் காட்சியனை விவரிக்க இனியொரு ஒரு கவிஞன் பிறந்துதான் வரவேண்டும்.  எப்போதும் குளிர்ச்சியாய் இருக்கின்ற அவளுடைய விழிகள், அந்த அருவி நீரின் வேகத்தால், சிவந்து காணப்படுகின்றன. அவள் நீராடி முடித்துவிட்டு வீடு திரும்பும் முன், அந்த சிவந்த கண்களினால், ஓர் உள்நோக்கத்தோடு, அவள் என்னைப் பார்த்த பார்வையையும், சிந்திய புன்னகையையும், அவை என்னை மயக்கியதையும் அப்பப்பா எப்படி நான் விவரிப்பேன். அதற்கும் ஒரு கவிஞன்தான் வரவேண்டும்! அவளோ அந்த மலைநாட்டுக்கு உரியவனின் மகள். அவ்வளவு உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த அவளை மீண்டும் எப்போது நான் காண முடியும், காணவும் முடியுமா?!



இப்படியெல்லாம் அவளை மீண்டும் சந்தித்து மகிழ்வுறலாம் என்று வந்த காதலனின் மனதில் எண்ண அலைகள் ஓடிக்கொண்டிருந்த வேளையில், அவன் கண்ட காட்சியோ.......

அவன் காதலியை அவள் வீட்டார் வீட்டில் மிகுந்த காவலுடன் வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய கொல்லையிலே நீண்ட இலைகளை உடைய முற்றிய கதிர்களைத் தாங்க முடியாமல் பருவம் அடைந்தபெண்  போல் தலைசாய்த்து நிற்கின்ற தினைக்கதிர்களைப் பல குன்றவர்கள் அறுவடை செய்து எடுத்துவந்து அவர்கள் வீட்டு முற்றத்திலே வைத்துக்கொண்டு இருந்தார்கள். அப்படி வைத்தவர்கள், தங்கள் களைப்பு நீங்க இரவிலே அந்த முற்றத்திலேயே ஓய்வெடுக்கின்றனர்.  வீட்டுத் தோட்டத்திலே ஆசினிப் பலா மரங்கள் உயர்ந்து வளர்ந்து காணப்படுகின்றன. அந்த மரங்களின் கிளைகளில் உள்ள மின்மினிப் பூச்சிகள் விளக்குகள் போன்று ஒளி வீசிக்கொண்டிருக்கின்றன. அந்த ஒளியிலே, வானில் அசைந்து செல்லுகின்ற மழைமேகங்களின் ஓட்டத்தைக்கொண்டு அக்குன்றவர்கள் மழை பெய்யும் அறிகுறியை வரவேற்றுக்கொண்டும் அதைப் பற்றி மகிழ்வுடன் உரையாடிக்கொண்டும் இருக்கிறார்கள். அந்த அழகான மாளிகை என்னும் சிறையிலே அடைபட்டிருக்கும் என் காதலியும் அந்த மின்மினிப் பூச்சிகளின் அழகையும் மேகத்திரள்களின் ஓட்டத்தையும் ரசித்துக்கொண்டுதான் இருப்பாள். மேகத்தின் மூலம் தூது விட்டுக்கொண்டு இருக்கிறாளோ!

“இவ்வளவு பாதுகாப்புகள் நிறைந்த இடத்திலிருந்து வெளியேறி அவள் உன்னை வந்து சந்திப்பாளென்றா நினைக்கிறாய்?”, என்று மீண்டும் தலைவியை சந்திக்கலாம் என்று நினைத்து வந்த தலைவன் தன் நெஞ்சுக்குத் தானே கூறிக்கொண்டிருக்கிறான்.

இந்தக் காட்சியை பெருங்கௌசிகனார் என்ற புலவர் பின்வரும் பாடலில் சித்தரிக்கின்றார்.

பொரு இல் ஆயமொடு அருவி ஆடி
நீர் அலைச் சிவந்த பேர் அமர் மழைக் கண்
குறியா நோக்கமொடு முறுவல் நல்கி,
மனைவயின் பெயர்ந்த காலை, நினைஇய           5
நினக்கோ அறியுநள் நெஞ்சே! புனத்த
நீடு இலை விளை தினைக் கொடுங் கால் நிமிரக்
கொழுங் குரல் கோடல் கண்ணி, செழும் பல
பல் கிளைக் குறவர் அல்கு அயர் முன்றில்,
குடக் காய் ஆசினிப் படப்பை நீடிய                   10
பல் மர உயர் சினை மின்மினி விளக்கத்து,
செல் மழை இயக்கம் காணும்
நல் மலை நாடன் காதல் மகளே.
  --- பெருங்கௌசிகனார் (நற்றிணை, 44)


(பாடலின் திணை: குறிஞ்சி; துறை: இற்செறிப்பின் பிற்றைஞான்று தலைவன் குறியிடத்து வந்து சொல்லியது)

கால் – தாள், குரல் - கதிர், இயக்கம் – சஞ்சாரம், ஆசினி – பலா வகையில் ஒன்று.
     ---------------------    


Tuesday 19 January 2016

சங்க இலக்கியத் தூறல் 10 - குன்றும் கண்ணீர் சிந்துகின்றதே.....



குன்றும் கண்ணீர் சிந்துகின்றதே.....

--- அன்பு ஜெயா, சிட்னி


ஒரு தலைவனும் தலைவியும் திருமணம் ஆவதற்கு முன்பே அடிக்கடி சந்தித்து, காதல் வயப்பட்டு களவு ஒழுக்கத்தில் மூழ்கி இருந்தனர். அடுத்த நிலையான கற்பு ஒழுக்கம் என்னும் திருமண வாழ்வுக்குள் நுழைவது பற்றி முடிவு செய்யாமல் தலைவன் காலம் தள்ளிக்கொண்டே இருந்தான். இதனால் தலைவியோ மனம் தளர்ந்து, உடல் தளர்ந்து வருத்தத்தில் மூழ்கி இருக்கிறாள். இதைக்கண்ட அவளுடைய தோழி தலைவியின் துயரத்தைத் தீர்க்க என்ன வழி இருக்கிறது என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள். 




இப்படி இருக்கையில் ஒருநாள், தலைவியைக் காண்பதற்காகத் தலைவன் வேலியோரத்தில் வந்து நிற்கின்றான். இதைப் பார்த்துவிட்ட தோழி அவனைப் பார்க்காததுபோல இருந்தாள். அதேசமயம். அவளுடைய மனதில் தன் தலைவியின் மனக்கவலையை தலைவனுக்கு உறைக்குமாறு கூறி, அவனைத் திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யத் தூண்டவேண்டுமென்று முடிவுசொய்தாள். அதற்காக, தலைவனைப் பாராததுபோல் இருந்துகொண்டு, ஆனால் அவன் காதில் விழுவதுபோல தலைவியிடம் உரக்கப் பேசத் தொடங்கினாள்.
“தோழி! நாம் முற்பிறவியில் செய்த வினையின் பயனே நமக்கு எதிராக இருக்கும்போது நீ வருத்தப்பட்டு, மனம் கலங்கி, உடல் மெலிவது சரியா? வருந்தப்படாமல் இரு. நீ நல்லபடியாக நீடூழி வாழ்வாய். உன்னுடைய துன்பத்தை தலைவன் அறியும்படி அவருடைய இடத்திற்குப் போய்ச் சொல்லிவிட்டு வருவோம். என்னுடன் வா. வெண்ணிற அலைகளை உடைய கடல் நீரினால் விளைகின்ற உப்பு, மழை நீரினாலேயே  கரைந்து கெடுவதுபோல நீ ஏன் உள்ளம் உருகி நிலைகுலைந்து போயிருக்கின்றாய்? அதை நினைத்தால் எனக்கு வேதனையா இருக்கிறது. தலைவனுடைய ஊரில், எல்லா இடங்களிலும் பழவகைகள் கனிந்து உதிர்ந்துள்ள சோலைகளைக் கொண்ட, குன்று கூட தலைவன் உனக்குச் செய்த கொடுமையைக் கண்டு, தலைவன் தனக்கே செய்த கொடுமையைப் போல எண்ணி, வருத்தத்தைத் தாங்க முடியாமல் தங்கள் கண்ணீரை அருவியாகக் கொட்டுகின்ற காட்சியை நாம் அங்கு பார்க்கலாம். அப்படி உன் கவலையைக் கண்டு கல்லே கரையும்போது தலைவன் உன் கவலையைத் தீர்க்காமல் இருப்பானா?” என்று கூறி தலைவியை அழைத்துக்கொண்டு போவதற்கு தயாராவதுபோல் கூறினால்.
இந்தக் காட்சியை நல்லந்துவனார் என்ற புலவர் பின்வரும் பாடலில் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

யாம்செய் தொல்வினைக்கு எவன்பேது உற்றனை
வருந்தல் வாழி தோழி யாம்சேர்ந்து
உரைத்தனம் வருகம் எழுமதி புணர்திரைக்
கடல்விளை யமிழ்தம் பெயற்குஏற் றாஅங்கு    5
உருகி உகுதல் அஞ்சுவல் உதுக்காண்
தம்மோன் கொடுமை நம்வயின் ஏற்றி
நயம்பெரிது உடைமையின் உயங்கல் தாங்காது
கண்ணீர் அருவி யாக
அழுமே தோழிஅவர் பழமுதிர் குன்றே.

--- நல்லந்துவனார் (நற்றிணை, 88)

(பாடலின் திணை: குறிஞ்சி; துறை: சிறைப்புறமாக தோழி தலைவிக்குச் சொல்லியது)

தொல்வினை – ஊழ்வினை, எழுமதி – எழுந்துவா, கடல் விளை அமுதம் – உப்பு, உகுதல் – நிலைகுலைதல், உதுக்காண் – அதோ பார், நம்வயின் ஏற்றி – தமக்கு செய்ததாக ஏற்று, உயங்கல் – வருத்தம்.

---------------------



Sunday 17 January 2016

கம்பனின் உவமைகள் 15 - திருமால் தோன்றும் காட்சி

கம்பனின் உவமைகளில் சில துளிகள் -15 

திருமால் தோன்றும் காட்சி 

--- அன்பு ஜெயா, சிட்னி


அயோத்தி மன்னனின் சிறப்பைப் பற்றிக் கூறிய கம்பரிடம், “ஐயா, அயோத்தி நகரைப் பற்றியும், மக்களைப் பற்றியும் மன்னனைப் பற்றியும் கூறினீர்கள். கதையின் நாயகனாக உதித்த நம்ம திருமாலைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன் என்று கேட்டேன். “சரி வா, தேவர்களெல்லாம் திருமாலின் வரவிற்காகக் காத்திருக்கிறார்கள். அவர் தோன்றுகின்ற காட்சியை உனக்குச் சொல்லுகிறேன்”, என்று கூறி, அந்தக் காட்சியை விவரித்தார் கம்பர்.

அந்தக் காட்சியை நீங்களும் காணுங்கள்.




“கருமையான நீலமேகத்தினில் செந்தாமரை மலர்க்கூட்டம்  மலர்ந்துள்ளது போன்ற தோற்றத்துடன், நீண்ட இரு சுடர்களை தன் இரண்டு பக்கங்களிலும் ஏந்திக்கொண்டு, தாமரை மலரால் தாங்கப்பட்டுள்ள இலக்குமி அம்மையுடன் திருமால் ஒரு செம்பொன் மலைமீது ஏறி வருவதுபோல, கருடாழ்வாரின்மேல் ஏறிக்கொண்டுவந்து காட்சி அளித்தார்.

கம்பனின் அந்தப் பாடல்:

கரு முகில் தாமரைக் காடு பூத்து, நீடு
இரு சுடர் இரு புறத்து ஏந்தி, ஏந்து அலர்த் 
திருவொடும் பொலிய, ஓர் செம்பொன் குன்றின்மேல்
வருவதுபோல், கழலுன்மேல் வந்து தோன்றினான்.


(பாலகாண்டம், திருவவதாரப் படலம் பாடல் 12)

இந்தப் பாடலில், நீலமேகமானது திருமாலுக்கும், தாமரை மலர்க் கூட்டமானது கை, கால், கண், வாய் போன்ற திருமாலின் அங்கங்களுக்கும், இரு சுடர்கள் சங்கு சக்கரங்களுக்கும், செம்பொன் குன்று கருடனுக்கும் உவமையாகச் சித்தரிக்கின்றார் கம்பர்.

* இரு சுடர் என்பதை சூரிய சந்திரராகவும் சில உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். விஷ்வவீரட் சொரூபத்தில் இரண்டு பக்கங்களில் சூரிய சந்திரரைக் காணலாம்.

(உவமைகள் தொடரும்)