Pages

Tuesday 11 November 2014

சங்க இலக்கியத் தூறல் - 7: காதல் முகிழ்த்திடும் அதிசயம்


('ஆஸ்திரேலிய தமிழ்முரசு' வலைப்பூவில் 10-11-2014 அன்று  வெளியிடப்பட்டது)

http://www.tamilmurasuaustralia.com/2014/11/blog-post_88.html



காதல் முகிழ்த்திடும் அதிசயம்


--- அன்பு ஜெயா, சிட்னி




அதோ அங்கே குளிர்ந்தகாற்று வீசிக்கொண்டிருக்கின்றது. அந்தக் காற்றினிலே மூங்கில்கள் அசைந்தாடிக் கொண்டிருக்கின்றன. அதுமட்டுமா? அப்படி வீசுகின்றக்காற்று அந்த மூங்கில்களில் உள்ள துளைகளின் வழியாகப் புகுந்து வரும்போது எழுகின்ற ஒலியானது குழலின் இசையைப்போன்று இன்பம் தருகின்றது.



அருகில் உள்ள பாறைகளிலிருந்து கீழே வீழ்கின்ற அருவி நீர் எழுப்புகின்ற ஒலியோ முழவின் இனிய இசையைப்போல உள்ளது. அங்கே சுற்றித்திரிகின்ற கலைமான்கள் எழுப்புகின்ற ஓசை பெருவங்கியத்திலிருந்து (பெருவங்கியம் = யானையின் துதிக்கைப் போன்ற வடிவுள்ள இசைக்குழல்) எழுகின்ற இசைபோன்று ஒலிக்கின்றது. அந்த மலைச்சாரலில் கண்ணுக்கழகாகப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. அப்பூக்களில் உள்ளத் தேனைப் பருகவருகின்ற வண்டுகளின் ரீங்காரம் இனிய யாழிசையாக ஒலிக்கின்றது. இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் ஒரு நடன நிகழ்ச்சிக்குப் பின்னணியாக அமைகின்றன. இப்பின்னணியில் அங்கே சுற்றித்திரிகின்ற மயில்கள் தங்கள் தோகையை விரித்து ஆடுகின்றன. இந்தக் காட்சியானது விறலியர் (பாணர்ப் பெண்கள்) மேடையில் ஆடுகின்ற ஆட்டத்தைப் போன்ற ஒரு தோற்றத்தைக் கண்முன்னே கொண்டுவருகின்றது. அந்த அழகிய நடனத்தைக் குரங்குகள் இன்று ஒரு மயக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கின்றன. 



இத்தகைய இனிய காட்சிகள் நிறைந்த மலைநாட்டையுடைய ஒரு தலைவன், வில்லினைக் கையிலே ஏந்திக்கொண்டு, தான் எறிந்த அம்பு தைத்த யானை ஒன்று அந்தப் பக்கம் வந்ததைத் தேடிக்கொண்டு தினைப்புனத்தின் வழியாக வருகின்றான். அந்தத் தலைவன் அவனைச் சேர்ந்த மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் செயல்களைச் செய்பவனாம். அந்தத் தினைப்புனத்தின் வாயிற்பக்கம் வந்து நின்றான். அப்படி நின்றவனைப் பல மகளிர் பார்த்தனர். தலைவியும் அவளுடைய தோழியும்கூடப் பார்த்தனர். அவன் இதுபோலத் தான் அம்பெய்த விலங்குகளைத் தேடி வருவதும், மகளிர் பலர் அவனைப் பார்ப்பதும் புதிதான நிகழ்ச்சி அல்ல. ஆனால், பிறர்க்கெல்லாம் மகிழ்ச்சியை அளிக்கின்ற அந்தத் தலைவன் இன்று இந்த இரவிலே தன் நினைவிலே வந்து தன்னைமட்டும் வருத்துவது ஏன் என்று புரியாமல் தலைவி தோழியிடம் வினவுகிறாள். இந்தக் காட்சியைப் புலவர் கபிலர் பின்வரும் பாடலில் விவரிக்கின்றார்.

ஆடுஅமைக் குயின்ற அவிர்துளை மருங்கின்
கோடை அவ்வளி குழலிசை ஆகப்
பாடுஇன் அருவிப் பனிநீர் இன்னிசைத்
தோடுஅமை முழவின் துதைகுரல் ஆகக்
கணக்கலை இகுக்கும் கடுங்குரல் தூம்பொடு   (5)
மலைப்பூஞ் சாரல் வண்டியாழ் ஆக
இன்பல் இமிழ்இசை கேட்டுக் கலிசிறந்து
மந்தி நல்அவை மருள்வன நோக்கக்
கழைவளர் அடுக்கத்து, இயலிஆ டும்மயில்
நனவுப்புகு விறலியின் தோன்றும் நாடன்    (10)
உருவ வல்வில் பற்றி, அம்புதெரிந்து,
செருச்செய் யானை செல்நெறி வினாஅய்,
புலர்குரல் ஏனற் புழையுடை ஒருசிறை,
மலர்தார் மார்பன், நின்றோற் கண்டோர்
பலர்தில், வாழி தோழி அவருள்,          (15)
ஆர்இருட் கங்குல் அணையொடு பொருந்தி,
ஓர்யான் ஆகுவது எவன்கொல்,
நீர்வார் கண்ணொடு, நெகிழ்தோ ளேனே?

                                 --- கபிலர் (அகநானூறு, 82)

ஆனால் காதலைப்பற்றி இப்பாடலில் வெளிப்படையாக ஒன்றும் கூறப்படவில்லையே என்று நினைக்கத் தோன்றுகிறது அல்லவா? அதற்குப் பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் அகமும் புறமும் என்ற தன்னுடைய நூலில் ஒரு நல்ல விளக்கத்தை அளிக்கின்றார்.

மூங்கிலில் காற்றடிக்கக் குழலோசை பிறப்பதும், அருவியில் முழவோசை எழுவதும், வண்டு இசைப்பதுவும், மயில் ஆடுவதும் அன்றாடம்  மலைச்சாரலில் சாதாரணமாக நடக்கின்ற நிகழ்ச்சி. தினமும் அந்தக் காட்சியைப் பார்க்கின்ற குரங்குகள் இன்று மட்டும் ஏன் அப்படி ஒரு மயக்கத்துடன் பார்க்கின்றன? ஏனெனில், அன்றாடம் நடைபெறும் நிகழ்ச்சியாக இருந்தாலும் இன்று மட்டும் ஒரு புதுமை நிகழ்ந்துள்ளது என்பதைக் குறிப்பால் உணர்த்தவே “மந்தி மருள்வன நோக்க” என்ற சொற்களைப் பயன்படுத்தியுள்ளார் கபிலர்.


கூர்ந்து நோக்கினால், தலைவன் அடிக்கடி விலங்குகளைத் தேடிவருவதும், தலைவியும் மற்ற மகளிரும் அவனைப் பலமுறை பார்த்திருத்தலும் பலமுறை நடந்த நிகழ்ச்சிதான். இன்று மட்டும், அதுவும் தலைவனைப் பார்த்த மற்ற மகளிரின் மனதைத் தாக்காத தலைவனின் நினைவு, தலைவியின் மனதைமட்டும் தாக்குவது ஏன்? அதுவே காதலின் தனிச்சிறப்பு. காதல் என்பது ஒரு மனநிலை என்பதனையும், அது திடீரெனத் தோன்றும் என்பதனையும், ஒரே சூழலில் பலர் இருப்பினும் குறிப்பிட்டவர்களையே அது தாக்குகிறது எனபதும் இக்காலத்திலும் நடைபெறும் நிகழ்வாகவே உள்ளது. இவ்வாறு தலைவியின் மனதில் காதல் முகிழ்த்திடும் அதிசயத்தைக் கபிலர் இப்பாடலில் எவ்வளவு நுட்பமாக வெளிப்படுத்தியிருக்கின்றார்!
------------------------------------------------------


Wednesday 15 October 2014

சங்க இலக்கியத் தூறல் - 6 : குழலிசையும் வருத்துமோ...?


சங்க இலக்கியத் தூறல் - 6

குழலிசையும் வருத்துமோ...?

--- அன்பு ஜெயா, சிட்னி

(சிட்னி சங்கத்தமிழ் மாநாடு 2014 - மலரில் வெளியிடப்பட்டது)

“குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். – திருவள்ளுவர்



தம்முடைய பிள்ளைகளின் மழலைச் சொல்லைக் கேட்டு மகிழ்ச்சியுறாதவர்களே குழலின் இசை இனிது’, யாழின் இசை இனிது என்று கூறுவார்கள் என்று வள்ளுவப் பெருந்தகை கூறிவிட்டுச் சென்றார். பிள்ளைகளின் மழலைச் சொற்கள் அளிக்கின்ற இன்பத்திற்கு அடுத்த நிலையில் இன்பமளிப்பவையாக குழலின் இசையையும், யாழின் இசையையும் வைத்திருக்கின்றார் வள்ளுவர். அப்படிப்பட்ட குழலின் இசைகூட ஒருவரை வருத்துமா என்ற கேள்வி எழுகின்றது அல்லவா? ஆம், குழலின் இசைகூட வருத்தும் காலங்களும் உண்டு என்று சங்க காலப் புலவர்கள் சில காட்சிகளை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றனர்.


குழலின் இசை வருத்துமா?

“வினைவலம் படுத்த வென்றியொடு மகிழ்சிறந்து,
-----------------------------------------------------------------------
புன்கண் மாலையொடு பொருந்திக், கொடுங்கோற்
கல்லாக் கோவலர் ஊதும்
வல்லாய்ச் சிறுகுழல் வருத்தக்காலே!   

(மதுரைக் கவுணியன் பூதனார்: அகநானூறு, 74: 1-17)

இப்பாடலின் சாரம்: தலைமகன் போர் நிமித்தம் தலைவியைப் பிறிந்து செல்லுகின்றான். அந்தப் பிரிவை நினைத்துத் தலைவி வருந்துகிறாள். அதைக் கண்ணுற்ற தோழி, “போரில் வெற்றிபெற்று மகிழ்ச்சியுடன் நமது வீரர்கள் திரும்புவார்கள். தலைவனும் தேர்ப்பாகனிடம் தன் தேரினை விரைவாக ஓட்டச்சொல்லி வந்துசேருவார். அதுவரை நீ பொறுத்திரு”, என்று தலைவியைத் தேற்றுவதற்காகக் கூறுகின்றாள்.  அதற்குத் தலைவி, “நீ கூறுவதைக்கேட்டு நான் வருத்தப்படாமல் இருப்பேன். ஆனால், இந்த மாலை நேரத்தில் மற்ற தொழில் எதையும் கற்க விரும்பாத ஆயர்கள் தங்கள் பசுக்களை மேய்த்தபடி, தங்களின் சிறு குழலினை வாசித்துக்கொண்டு வருகிறார்கள். அந்தக் குழலின் ஓசையும், இந்த மாலைப் பொழுதுடன் சேர்ந்து என்னை வருத்துகின்றனவே”, என்று கூறுகின்றாள்.

இனிமையான குழலிசை வருத்தும் நேரம்:

“பகலினும் அகலா தாகி யாமம்
--------------------------------------------------------
ஒரு தனி அன்றில் உயவுக்குரல் கடைஇய
உள்ளே கனலும் உள்ளம்மெல்லெனக்
கனைஎரி பிறப்ப ஊதும்
நினையா மாக்கள் தீங்குழல் கேட்டே?     

(வடம வண்ணக்கண் பேரிச்சாத்தனார்: அகநானூறு, 305:1-15)

இப்பாடலின் சாரம்: தலைமகன் ஒருவன் பொருள் தேடுவதற்காகத் தன் தலைவியை விட்டுப் பிரிந்து வேற்றூருக்குச் சென்றிருக்கிறான். அவனைப் பிரிந்திருக்கும் கவலையில் உள்ள தலைவியை அவள் தோழி தேற்றுதற்கு முயல்கிறாள். ஆனால் தலைவியோ, “அருள் இல்லாதவராகக் காதலர் பொருள் தேடச் சென்றுவிட்டார். அதனால் மனம் நொந்து வேதனையில் மூழ்கியவளாக இருக்கிறேன். அங்கே பருத்த அடியுடைய பனைமரத்தில் துணையின்றி தனித்து நிற்கும் அன்றில் பறவையின் அவலக்குரல் கேட்கிறது. அந்தக் குரல் கொதிக்கின்ற என் நெஞ்சத்தினுள்ளே தீயை மூட்டுகின்றது. என்னுடைய இந்த நிலையை அறியாமல் அங்கே கோவலர்கள் (ஆயர்கள்) ஊதிக்கொண்டிருக்கிற குழலின் ஓசை மேலும் என்னை வருத்தும்போது நான் எப்படி என் மனத்தைத் தேற்றிக்கொள்ள முடியும் தோழி?, என்று வினவுகிறாள். இவ்வாறு இனிமையான குழலினிசைகூட தன் தலைவனுடன் இருந்த இன்பமான சூழல்களை அவளுக்கு நினைவுபடுத்தி அவளை வருத்துகின்றது.

கார்காலத்து மழையும் வாடையும் வருத்துகின்றன:

“சொல்லிய பருவம் கழிந்தன்று எல்லையும்
மயங்கிருள் நடுநாள் மங்குலோடு ஒன்றி
------------------------------------------------------------------
பல்லான் தந்த கல்லாக் கோவலர்
கொன்றையந் தீங்குழல் மன்றுதோ றிசைப்ப
உயிர்செலத் துணிதரு மாலை
செயிர்தீர் மாரியொடு ஒருங்குதலை வரினே. 

(கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்: நற்றிணை, 364: 1-12)

இப்பாடலின் சாரம்: ஒரு தலைவனும் தலைவியும் களவொழுக்கத்திலே திளைத்திருந்தார்கள். தலைவியின் காதலை நன்கு உணர்ந்த தலைவன் அவளை மணம் புரிந்து கொள்வதற்குத் தேவையான பொருள் தேடுவதற்காக வெளியூர் செல்ல முடிவு செய்தான். செல்லும்போது தலைவியிடம் தன் வேலை முடித்து தான் வேனில் பருவத்தில் திரும்பிவிடுவதாகக் கூறிச் சென்றான். தங்கள் திருமணத்திற்குப் பொருள் தேடத்தானே தலைவன் வேற்றூர் செல்கிறான் என்பதனால் தலைவியும் அந்தப் பிரிவை ஏற்றுக்கொண்டு தலைவனை வழியனுப்பி வைத்தாள். தலைவனோ தன் வேலை முடியாததால் கார்காலம் தொடங்கியும் திரும்பவரவில்லை. அதனால் கவலையுற்ற தலைவிக்கு தன்னைச் சுற்றியுள்ளவையெல்லாம் அவளை வருத்துவதாகத் தோன்றுகின்றது. அப்போது அவள் தன் தோழியிடம், “தலைவன் கூறிச்சென்ற நேரத்தில் திரும்பி வரவில்லை. இந்தக் கார்காலத்து மழையும், வாடைக்காற்றும் என்னை வருத்துகின்றன. இதனால் என் வாழ்க்கையின்மீது வெறுப்பு ஏற்படுகிறது. இத்துடன், மாலையில் பசுக்களை மேய்த்துக் கொண்டிருக்கின்ற கோவலர்களின் குழலிசையும் சேர்ந்து என்னை வருத்தினாள் நான் பல நாள் இவ்வுலகில் வாழமுடியாது”, என்று கூறுகிறாள்.

தலைவியின் முன் ஊதும் குழல் வருத்தும்:

காயாங் குன்றத்துக் கொன்றை போல
மாமலை விடாகம் விளங்க மின்னி
------------------------------------------------------------------
அழல்தொடங் கினளே ஆயிழை அதன்எதிர்
குழல்தொடங் கினரே கோவலர்
தழங்குகுரல் உருமின் கங்கு வானே.
(ஔவையார்: நற்றிணை, 371: 1-9)

இப்பாடலின் சாரம்: கற்புநெறியில் கணவனும் மனைவியுமாக வாழ்ந்த வந்த இணையரில், கணவன் தங்கள் வாழ்விற்காகப் பொருள் தேடும் பொருட்டு மனைவியைப் பிரிந்து சென்றான். செல்லும் முன் தன் தலைவியிடம் தான் கார்காலத்தில் திரும்பிவிடுவேன் என்று கூறி விடைபெற்றான். தலைவன் தான் சென்ற இடத்தில் திறமையுடன் பணியாற்றி குறித்த காலத்தில் தேவையான பொருள் சேர்த்துக்கொண்டு திரும்பி வர முடிவு செய்கின்றான். அப்பொழுது வேனில் காலம் முடிந்து கார்காலம் துவங்குவற்கான அறிகுறிகள் தெரிகின்றன. கொன்றை, காயா முதலிய மரங்கள் தழைத்து பூக்கள் மலர்ந்து கார்காலத்தின் வரவை எடுத்துக் காட்டுகின்றன.  வானத்தில் கரிய மேகக் கூட்டங்கள் தோன்றி தலைவனின் நாடு இருந்த திசை நோக்கி நகர்ந்து செல்லுகின்றன. அவற்றைக் கண்ட தலைவனுக்குத் தலைவியின் காதல் நினைவு வருகின்றது. இந்த மேகங்கூட்டங்களின் வரவைக் கண்டால் கார்காலம் துவங்கிவிட்டது இன்னும் நம் தலைவன் வரவில்லையே என்று தலைவி வருந்துவாள் என்று அவனுக்குத் தோன்றியது.  அதனால் தன் தேர்ப்பாகனிடம், “பாகனே, இந்த மேகக்கூட்டங்கள் என் தலைவி இருக்கும் இடம் நோக்கிச் சென்று அங்கு மழையைப் பொழிவிக்கும். அதைக் கண்டால் நான் அவளிடம் வாராமல் இருப்பதை எண்ணி வருந்தி அழுவாள். அதை அதிகமாக்கும் வகையில், மாலைப் பொழுதில் கோவலர்கள் ஊதும் குழலிசை அவள் மனதில் காதல் வேட்கையைத் தூண்டி அவளைத் துன்புறுத்தும். எனவே நாம் விரைந்து செல்வது இன்றியமையாதாகும். நீ தேரினை வேகமாக ஓட்டுவாயாக”, என்று கூறினான்.

வருத்தும் மாலை நேரம்

“வெல்புகழ் மன்னவன், விளங்கிய ஒழுக்கத்தால்,
நல்லாற்றின் உயிர் காத்து, நடுக்கறத் தான்செய்த
-------------------------------------------------------------------------------------
மாலை நீ – தையெனக் கோவலர் தனிக்குழல் இசைகேட்டுப்
பையென்ற நெஞ்சத்தேம் பக்கம்பா ராட்டுவாய்,
----------------------------------------------------------------------------------
உள்ளில் உள்ளம், உள்ளுள் உவந்தே.

(நல்லந்துவனார்: கலித்தொகை, 118:1-25)

இப்பாடலின் சாரம்: தலைவன் தலைவியைப் பிரிந்து செல்கிறான். அந்தப் பிரிவின் துயரத்தைத் தாங்க முடியாத தலைவி பலவாறு தன் துயரத்தை வெளிப்படுத்துகிறாள். பலகாலம் மக்களைக் காத்த மன்னவன் தன் நல்வினைகளின் பயன்களை அடைவதற்காக துறவு மேற்கொள்வதுபோல, பகலெல்லாம் ஒளி வீசிய சூரியன் மாலையில் மறைந்தான். அந்த மன்னன் சென்றபின் மற்றொருவன் நாட்டை ஆள்வதுபோல், கதிரவன் மறைந்தபின் வானிலே சந்திரன் தோன்றினான். இந்த பகலுக்கும் இரவிற்கும் இடையில் மயக்கம் நிறைந்த மாலை வந்தது. அதை நோக்கித் தலைவி தன் மனநிலையைக் கூறுகின்றாள். “ஏ மாலையே! என் தலைவனைப் பிரிந்து நான் மனம் குவிந்து போயிருக்கும்போது நீ வந்து என் அழகைச் சிதைக்கின்றாய். மனம் நெகிழ்ந்து காதலருடன் கூடியிருக்கும் மங்கையரின் அழகை நீ நீக்க மாட்டாய். இந்த வேளையில் கோவலர் ஊதும் குழலிசை கேட்கிறது. அது தை என்ற ஓசையோடு ஒலிக்கிறது. அந்த ஓசை கேட்கையில் நான் என் காதலருடன் கூடி இருக்க இயலாமல் போயிற்றே என்று மனம் நொந்து இருக்கும்போதும் என் உயிரை வாங்காமல் வேடிக்கைப் பார்க்கிறாய்,” என்று தலைவி மாலை நேரத்தை கடிந்துகொள்கின்றாள்.

குழல்கூட வருந்துகின்றதோ!

“தொல்ஊழி தடுமாறித் தொகல்வேண்டும் பருவத்தால்
பல்வயின் உயிரெல்லாம் படைத்தான்கண் பெயர்ப்பான்போல்
-----------------------------------------------------------------------------------------------------
பனிஇருள் சூழ்தரப் பைதல்அம் சிறுகுழல்
இனிவரின் உயரும்மன் பழிஎனக் கலங்கிய
தனியவர் இடும்பைகண்டு இனைதியோ?- எம்போல
இனியசெய்து அகன்றாரை உடையாயோ நீ? எனவாங்கு.
---------------------------------------------------------------------------------
அருந்தியோர் நெஞ்சம் அழிந்துஉக விடினே.

(கலித்தொகை, 129: 1-25)

இப்பாடலின் சாரம்: களவு நெறியிலே தன் தலைவனுடன் வாழ்ந்துவந்த தலைவி இப்போது தலைவனைப் பிரிந்து வாடுகின்றாள். தன்னைச் சூழ்ந்துள்ள பல பொருள்களிடம் அவை தன்னுடைய உணர்வைப் புரிந்து கொண்டு பேசும் என்ற எண்ணத்தில் அவற்றிடம் பேசுகின்றாள். அதில் ஒன்றாக, புல்லாங்குழலைப் பார்த்து, “வருத்தத்தையுடைய குழலே! என் தலைவர் இந்த நேரத்திலே திரும்ப வந்தாலும் ஊர் மக்களின் பழிச்சொல் நீங்கிவிடுமே. என்னைப்போல் தலைவரின் வரவுக்காக ஏங்கும் மங்கையரின் துன்பத்தைக் கண்டு வருந்துகிறாயோ? ஒருவேளை என்னை மகிழ்வித்த என் தலைவர் பிரிந்து சென்றதுபோல் உனக்குரியவரும் உன்னைப் பிரிந்து சென்றாரோ?” என்று கேட்கிறாள். தான் வருத்தத்தில் உள்ளபோது தான் பார்க்கும் பொருள்களெல்லாம் வருந்துவதாகத் தோன்றுகின்றது தலைவிக்கு. இப்படிப் பலவிதமாக தலைவி புலம்பி, வருந்துகின்ற நிலையை தலைவனுக்கு எடுத்துரைத்துத் தலைவியைத் திருமணம் செய்துகொள்ளும்படி அவளுடைய தோழி தலைவனிடம் கூறுகின்றாள்.


இவ்வாறு, இனிமை பயக்கக்கூடிய குழலின் இசைகூட மனதிற்கு இன்பம் தராமல் வருத்தம் அளிக்கும் சூழ்நிலைகள் மனித வாழ்க்கையில்  உண்டென்பதைச் சங்க காலப் புலவர்கள் அழகாக இக்காட்சிகள் மூலம் எடுத்துக் கூறியுள்ள சிறப்பை என்னென்று புகழ்வது!
---------------------------

Monday 15 September 2014

சங்க இலக்கியத் தூறல் - 5: மருந்தறிந்தவன்---------------?


சங்க இலக்கியத் தூறல் - 5

(ஆஸ்திரேலிய தமிழ்முரசு வலைப்பூவில் http://www.tamilmurasuaustralia.com/ 15-09-2014 அன்று வெளியிடப்பட்டது )


மருந்தறிந்தவன் நோய்தீர்க்க மறுப்பானோ……?

--- அன்பு ஜெயா, சிட்னி

காதலனின் பிரிவினால் தவிக்கின்ற காதலி தன் செயலற்ற நிலையை எண்ணித் தனக்குள்ளே புழுங்குகின்றாள். இதைக் கண்ணுற்ற அவள் தோழி தலைவியின் இந்தப் பிரிவாற்றாமையைப் போக்க வேண்டி தலைவனைச் சந்தித்துத் தலைவி மற்ற பொருள்களையும் உயிரினங்களையும் அழைத்து அவற்றால் பேசவும்,  கேட்கவும் முடியும் என்று நினைத்துக்கொண்டு அவற்றிடம் தன் வருத்தத்தின் உச்சத்தில் பலவாறு புலம்புகின்ற அவல நிலையை எடுத்துக் கூறுகின்றாள்.





தலைவியின் புலம்பல்

“உலகத்து உயிர்களெல்லாம் தம் வாழ்நாளின் இறுதியில் இறந்து, மறபடியும் பிறந்து, பல பிறவிகள் எடுத்து, உலக முடிவு காலத்தில் (ஊழி) தம்மைப் படைத்த இறைவனிடம் சென்று ஒடுங்குகின்றன. அதன் பின் பேரிருள் சூழும். அதுபோலப் பகல் நேரத்தில் தன்னுடைய ஒளியினால் இவ்வுலகத்தை வாழ்வித்த சூரியன், அந்நாளின் முடிவில் தன் ஒளிக்கதிர்களைத் தன்னுள்ளே அடக்கிக்கொண்டு மலைகளிடையே மறைந்திடுவான். அப்போது எங்கும் இருள் சூழும். நல்ல நெறியுடன் ஆட்சி செய்த மன்னனுக்குப்பின் அவனுக்கு நேர்மாறான, வலிமையற்ற ஓர் அரசனின் ஆட்சிக்காலம் வருவதுபோல, அந்த இருளுக்கும் பகலுக்கும் எல்லையாக இருக்கும் மாலை நேரம் வந்துசேரும். அந்த மாலை நேரம்தான் எனக்கு எவ்வளவு துன்பத்தைத் தருகின்றது.”

சங்க இலக்கியப் பாடல்:

தொல்ஊழி தடுமாறித் தொகல்வேண்டும் பருவத்தால்
பல்வயின் உயிரெல்லாம் படைத்தான்கண் பெயர்ப்பான்போல்
எர்உறு தெறுகதிர் மடங்கித்தன் கதிர்மாய
நல்லற நெறிநிறீஇ உலகாண்ட அரசன்பின்
அல்லது மலைந்திருந்து அறநெறி நிறுக்கல்லா
மெல்லியான் பருவம்போல்  மயங்குஇருள் தலைவர
எல்லைக்கு வரம்பாய இடும்பைகூர் மருண்மாலை ;    
(கலித்தொகை,129: 1-7)


கடலினிடம் பேசுகிறாள்

 “எப்போதும் அலைகளினால் ஓசையிட்டுக் கொண்டிருக்கும் பரந்து விரிந்த கடலே! எங்கள் வலிமை போய்விட்டது என்பது போல எண்ணி எங்களைக் கைவிட்டுப் பிரிந்த தலைவர்களால் நாங்கள் படுகின்ற வேதனையைக் கண்டு நீயும் வருந்துகின்றாயோ? அதனால்தான் ஓசை எழுப்பி உன் வருத்தத்தைத் தெரிவிக்கின்றாயோ?  அல்லது, எங்களைப் போலவே, நீயும் உன்னைக் காதலித்துப் பின் பிரிந்து போன காதலனை நினைத்து வருந்துகின்றாயோ?”

பாய்திரை பாடுஓவாப் பரப்புநீர்ப் பனிக்கடல்!
தூஅறத் துறந்தனன் துறைவன்என்று  அவன்திறம்
நோய்தெற உழப்பார்கண் இமிழ்தியோ? - எம்போலக்
காதல்செய்து அகன்றாரை உடையையோ நீ?            
(கலித்தொகை,129: 8-11)


அன்றில் பறவையினிடம் பேசுகிறாள்

“முற்றத்தில் நின்கின்ற பனைமரத்திலே உள்ள அன்றில் பறைவையே! தலைவர் நன்றி மறந்தார் என்று நான் வருந்துவதால் ஏற்படுகின்ற என் துயரத்தை அறிந்துதான் எனக்காக நீ ஓசை எழுப்புகின்றாயோ? இல்லை, என்னுடைய தலைவர் எனக்கு இன்பம் அளித்துப்பின் பிரிந்து சென்றதைப்போல உன் காதலரும் உன்னைப் பிரிந்து சென்றதனால் ஓசை எழுப்பி உன் துயரத்தை வெளிப்படுத்துகின்றாயோ?”

மன்றுஇரும் பெண்ணை மடல்சேர் அன்றில்!
நன்றுஅறை கொன்றனர் அவர்எனக் கலங்கிய
என்துயர்  அறிந்தனை நரறியோ? - எம்போல
இன்துணைப் பிரிந்தாரை உடையையோ நீ?   
(கலித்தொகை,129: 12-15)


புல்லாங்குழலினிடம் பேசுகிறாள்

தலைவி ஒரு புல்லாங்குழலைப் பார்த்து, “வருத்தத்தையுடைய குழலே! என் தலைவர் இந்த நேரத்திலே திரும்ப வந்தாலும் ஊர் மக்களின் பழிச்சொல் நீங்கிவிடுமே. இப்போது வருவாரோ மாட்டாரோ என்று என்னைப்போல் தலைவரின் வரவுக்காக ஏங்கும் மங்கையர் அனைவருடைய துன்பத்தையும் கண்டு நீ வருந்துகின்றாயோ? ஒருவேளை என்னை மகிழ்வித்த என் தலைவர் என்னைத் தனியேவிட்டுப் பிரிந்து சென்றதுபோல உன்னை மகிழ்வித்த உன்னுடைய காதலரும் உன்னைவிட்டுப் பிரிந்து சென்றாரோ?” என்று வினவுகிறாள்.

பனிஇருள் சூழ்தரப் பைதல்அம் சிறுகுழல்!

இனிவரின் உயரும்மன்  பழிஎனக் கலங்கிய

தனியவர் இடும்பைகண்டு  இனைதியோ?எம்போல

இனியசெய்து அகன்றாரை உடையையோ நீ?  
      
(கலித்தொகை,129: 16-19)

இவ்வாறு தான் வருத்தத்தில் உள்ளபோது தான் பார்க்கும் பொருள்களெல்லாம் வருந்துவதாகத் தோன்றுகின்றது தலைவிக்கு.


தோழியின் கூற்று

தலைவனைச் சந்தித்த தோழி அவனிடம், “தலைவனே! இவ்வாறெல்லாம் என் தலைவி புலம்புகின்றாள். அவளுடைய மனம் ஒடிந்து, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு இது தெரிந்துபோனதால் அவள் வருத்தம் அதிகமாகிப் பித்துப்பிடித்தவள் போல இருக்கின்றாள். அவளுடைய வருத்தத்தை விரைந்து வந்து நீக்குவாயாக. அப்படிச் செய்யாமல் உன்னைச் சேர்ந்தோரின் மனம் அழிந்து சிதறும்படி விட்டுவிடுவாயானால், அது நோயால் வருந்தும் ஒருவனுக்கு அதைத் தீர்க்கும் மருந்தைத் தெரிந்திருந்தும் கூறாமல் மறைப்பதைவிடக் கொடுமையான செயலாகும்”, என்று கூறினாள். இப்படிப் பலவிதமாகத் தலைவி புலம்பி, வருந்துகின்ற நிலையைத் தலைவனுக்கு எடுத்துரைத்துத் தலைவியைத் திருமணம் செய்துகொள்ளும்படி தோழி தலைவனிடம் வேண்டிக்கொள்கின்றாள்.

எனவாங்கு;

அழிந்துஅயல் அறிந்த எவ்வம் மேற்படப்

பெரும்பே துறுதல் களைமதி பெரும

வருந்திய செல்லல் தீர்த்த திறன்அறி ஒருவன்

மருந்துஅறை கோடலின் கொடிதே – யாழநின்

அருந்தியோர் நெஞ்சம் அழிந்துஉக விடினே.  

     (கலித்தொகை, 129: 20-25)


சங்க இலக்கியங்களில் ஒரு தலைவன்-தலைவியினுடைய வாழ்க்கையில் தோழியின் பங்கு எவ்வளவு சிறப்பானதாக இருந்தது என்பதற்கு இது போன்ற சங்க இலக்கியப் பாடல்கள் பல சான்று பகர்கின்றன.
---------------------------------------







Wednesday 27 August 2014

கம்பனின் உவமைகள் 14 - அயோத்தி மன்னனின் சிறப்பு

கம்பனின் உவமைகளில் சில துளிகள் -14 

அயோத்தி மன்னனின் சிறப்பு
--- அன்பு ஜெயா, சிட்னி
   
அயோத்தி வாழ் மங்கையர், மக்கள் இவர்களின் சிறப்பைக் கூறிய கம்பனிடம், ஐயா கவிச்சக்ரவர்த்தி, அந்த நாட்டில் வாழ்கின்ற குடிமக்களின் சிறப்பையெல்லாம் கூறினீர்கள்.  அவர்கள் அனைவரும் சிறப்புப் பெற்று இருக்கின்றார்களென்றால் அந்நாட்டை ஆளுகின்ற மன்னனும் நிச்சயம் சிறப்புடையவனாகத்தானே இருக்கவேண்டும். அவனுடைய சிறப்பைப் பற்றியும் கொஞ்சம் கூறுங்களேன்,’ என்று கேட்டேன். அதற்குக் கவிச்சக்ரவர்த்தி தன்னுடைய பாணியில் உவமைகளுடன் கூறிய மறுமொழி என்னவென்று பார்க்கலாம்.




படம்: வரைந்து அதை கூகுளில் வெளியிட்டவருக்கு நன்றி.


“ஒரு தாய் எவ்வாறு தன் பிள்ளைகள் அனைவரிடமும் வேறுபாடின்றி அன்பு பாராட்டி அரவணைத்துக் காப்பாளோ அதுபோல அயோத்தியை ஆண்ட  தசரதச் சக்கரவர்த்தியும் தன் மக்களைப் பாகுபாடின்றி அரவணைத்துக் காப்பாற்றுகின்றான். அதனால் அவன் ஒரு தாயைப் போன்றவன். தவம் என்பது அதைச் செய்பவனுக்கு எப்படி வேண்டிய நன்மைகளைத் தருகின்றதோ அதுபோலத் தசரதன் மக்களுக்கு வேண்டிய நன்மைகளைப் புரிவதால் தவத்திற்கு ஒப்பானவன்.  பிள்ளை ஒருவன் தான் செய்யும் இறுதிச் சடங்குகளின் மூலம்  தன் தாய்தந்தையரை உயர்கதி பெறச் செய்கின்றன். அதுபோல, இம்மன்னன் நாட்டில் தீய செயல்களை ஒழித்து நல்ல செயல்கள் பெருக உதவுகின்றான்.  அதானால் அவன் ஒரு பிள்ளைக்கு ஒப்பானவன்.  மருந்து எப்படி ஒரு நோயைப் போக்குகின்றதோ அதேபோலத் தன் மக்களுக்குத் தீங்கிழைக்கும் தீயசக்திகளை மன்னன் விரைந்து அழித்து மக்களைக் காப்பாற்றுவதால் அவன் மருந்துக்கு ஒப்பானவன்.  அறிவு என்பது நுட்பமான பொருளைக்காண முற்படுவது.  தசரதச் சக்ரவர்த்தியும்  நுட்பமான நூல்களின் பொருளினை ஆராய்ந்தறிய முற்படுபவன். அதனல் அவன் அறிவுக்கு ஒப்பனாவன்,” என்று கவிச்சக்ரவர்த்தி கூறினார்.

கம்பனின் அந்தப் பாடல்:

தாய் ஒக்கும் அன்பின்; தவம் ஒக்கும் நலம் பயப்பின்;
சேய் ஒக்கும். முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்;
நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும்; நுணங்கு கேள்வி
ஆயப் புகுங்கால், அறிவு ஒக்கும்; எவர்க்கும், அன்னான்.

    (பாலகாண்டம், அரசியற்படலம் பாடல்  4, நூல் பாடல் – 172.)


இந்தப் பாடலில் தசரதச் சக்கரவர்த்தியைக் கவிச்சக்ரவர்த்தி ஒரு தாயுக்கும், பிள்ளைக்கும், மருந்திற்கும், அறிவிற்கும் ஒப்பிட்டு அயோத்தி மன்னனின் சிறப்பை வெளிப்படுத்துகின்றார்.

(உவமைகள் தொடரும்)


Wednesday 23 July 2014

சங்க இலக்கியத் தூறல் - 4: உள்ளத்தில் ஊடுருவி நிற்கும் காதல்

சங்க இலக்கியத் தூறல் - 4

உள்ளத்தில் ஊடுருவி நிற்கும் காதல்
                  - அன்பு ஜெயா, சிட்னி


 ஒரு தலைவனும் தலைவியும் காதல் வயப்பட்டு, அடிக்கடி சந்தித்து வாழ்ந்து வருகின்றார்கள். நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகி ஓடின. களவொழுக்கம் என்று கூறப்படும் இந்த நிலையிலிருந்து வாழ்க்கையின் அடுத்த கட்டமான மணவாழ்விற்குள் நுழைவதற்கான தருணம் வந்துவிட்டது என்று தலைவன் முடிவு செய்தான். அவன் ஆசையைத் தலைவியிடம் கூறினான். தலைவிக்கும் அவனைத் திருமணம் செய்துகொள்ள உடன்பாடு இருந்தது. ஆனால், அவர்களுடைய ஆசைக்கு அவர்களுடைய பெற்றோர்களின் சம்மதம் கிடைப்பதாகத் தெரியவில்லை.



இவ்வாறு களவொழுக்கத்தில் வாழ்கின்ற காதலர்கள் கற்பு நெறியான மணவாழ்க்கையைத் துவக்கப் பெற்றோர் ஆதரவு கிடைக்காததால் தலைவன் தலைவியைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு வேறு ஓர் ஊரில் வாழ விரும்பினான். தன்னை மணக்கப் போகிறவன் அழைக்கின்றான் என்பதால் தலைவியும் தன் பெற்றோர்களைப் பிரிந்து தலைவனுடன் செல்வதற்கு ஒப்புக்கொண்டாள். அவ்வாறு இவர்கள் செல்வதற்கான நாள், நேரம், இடம் குறித்துத் தலைவியின் தோழியின் மூலம் தலைவன் அறிவித்திருந்தான். குறித்த அந்த நாளில் தோழி தலைவியை தலைவனிடம் பாதுகாப்பாக ஒப்படைப்பதற்காக அழைத்து வந்தாள்.

சிறுவயது முதல் தான் ஒன்றாக ஓடி ஆடி திரிந்த தோழியான தலைவியைப் பிரியவேண்டிய தருணம் வந்ததை நினைத்து தோழி வருந்தினாள். அதே சமயம் தன் நண்பர்கள், உறவினர்கள், மற்றும் தெரிந்த அனைவரையும் பிரிந்து தலைவனை மட்டுமே நம்பிச் செல்கின்ற தலைவிக்கு என்ன பாதுகாப்பு உள்ளது என்று எண்ணிக் கலங்கினாள். மலருக்கு மலர் தாவுகின்ற வண்டினைப் போன்ற ஆண்மக்களின் சுபாவமும் அவள் மனக்கண்களில் தோன்றுகின்றது. அதன் விளைவாக தலைவனிடம் தலைவியை ஒப்படைத்து விட்டு அவனிடம் தன் எண்ணத்தையும் வேண்டுகோளையும் தெரிவிக்கின்றாள்.

 “மருதநிலத்தைச் சேர்ந்த தலைவனே! உன்னையும் உன் வார்த்தைகளையும் மட்டுமே நம்பித் தலைவி உன்னோடு வருகின்றாள்.  குறித்த நேரத்தில் நீ இந்த இடத்திற்கு அவளை அழைத்துச் செல்ல வந்ததிலிருந்து வார்த்தை தவறாத ஆண்மகன் நீ என்று தெரிகின்றது. இன்று போல் என்றும் அவளைக் கண்ணும் கருத்துமாக நீ பாதுகாக்க வேண்டும்.

“இப்போது நிமிர்ந்து உயர்ந்து நிற்கின்ற அவளது மார்பகங்கள் தளர்ந்து சாய்கின்ற காலத்திலும், இன்று கரிய நிறத்தோடு அவள் மேனியின் மேல் தவழுகின்ற நீண்ட கூந்தல் நரைத்துப்போகும் காலத்திலும் கூட நீ இவளைக் கைவிடாது அன்பு பாராட்ட வேண்டும்.

“பல வகைகளாலும் அழகு செய்யப்பட்ட தேர்கள் பலவற்றை தம்மிடம் வைத்துள்ள சோழ மன்னர்கள் கொங்கு நாட்டவரை வெல்வதற்காகச் செய்த போரில் ‘பழையன்’ என்பவன் தானைத் தலைவனாக இருந்தான். அவன் எறிந்த வேல் பிழைத்து எப்போதும் குறி தப்பியது இல்லை. அதைப்போல, உன்னை மட்டுமே நம்பி உன்னுடன் வருகின்ற தலைவியை உன் வார்த்தைகள் பிழையாமல், எப்போதும், எந்த நிலையிலும் நீ அவளைப் பிரியாமல் காப்பாற்ற வேண்டும்,” என்று தோழி தலைவனிடம் வேண்டினாள்.

இவ்வாறு உடலின் தோற்றம் கண்டு பிறக்கின்ற காதலைவிட, உள்ளத்தில் ஊடுருவி நிற்கும் காதலே சிறந்தது என்று கருத்தினையும், தலைவியின் வாழ்வு சிறப்பாக அமைய வேண்டுமென்ற உண்மையான தோழியின் துடிப்பையும், நல்லெண்ணத்தையும், சங்க காலப் புலவரான குடவாயிற் கீரத்தனார் பின் வரும் பாடலில் வெளிப்படுத்துகின்றார்:

அண்ணாந் தேந்திய வனமுலை தளரினும்
பொன்னேர் மேனியின் மணியின் தாழ்ந்த
நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
நீத்தல் ஓம்புமதி பூக்கேழ் ஊர
இன்கடுங் கள்ளின் இழையணி கொடித்தேர்
கொற்றச் சோழர் கொங்கர்பு பணீஇயர்
வெண்கோட் டியானைப் போஒரு கிழவோன்
பழையன் வேல்வாய்த் தன்னநின்
பிழையா நன்மொழி தேறிய இவட்கே.
                                 (நற்றிணை, 10:1-9.)

திணை: பாலை

துறை:  உடன்போக்கும் தோழி கூறியது


அருஞ்சொற்பொருள்: அண்ணாத்தல் – நிமிர்தல், வனம் – அழகு, கடுங்கள் –  முற்றிக் கடுப்பு ஏறிய கள், தேறுதல் – தெளிதல்.