Pages

Wednesday 27 August 2014

கம்பனின் உவமைகள் 14 - அயோத்தி மன்னனின் சிறப்பு

கம்பனின் உவமைகளில் சில துளிகள் -14 

அயோத்தி மன்னனின் சிறப்பு
--- அன்பு ஜெயா, சிட்னி
   
அயோத்தி வாழ் மங்கையர், மக்கள் இவர்களின் சிறப்பைக் கூறிய கம்பனிடம், ஐயா கவிச்சக்ரவர்த்தி, அந்த நாட்டில் வாழ்கின்ற குடிமக்களின் சிறப்பையெல்லாம் கூறினீர்கள்.  அவர்கள் அனைவரும் சிறப்புப் பெற்று இருக்கின்றார்களென்றால் அந்நாட்டை ஆளுகின்ற மன்னனும் நிச்சயம் சிறப்புடையவனாகத்தானே இருக்கவேண்டும். அவனுடைய சிறப்பைப் பற்றியும் கொஞ்சம் கூறுங்களேன்,’ என்று கேட்டேன். அதற்குக் கவிச்சக்ரவர்த்தி தன்னுடைய பாணியில் உவமைகளுடன் கூறிய மறுமொழி என்னவென்று பார்க்கலாம்.




படம்: வரைந்து அதை கூகுளில் வெளியிட்டவருக்கு நன்றி.


“ஒரு தாய் எவ்வாறு தன் பிள்ளைகள் அனைவரிடமும் வேறுபாடின்றி அன்பு பாராட்டி அரவணைத்துக் காப்பாளோ அதுபோல அயோத்தியை ஆண்ட  தசரதச் சக்கரவர்த்தியும் தன் மக்களைப் பாகுபாடின்றி அரவணைத்துக் காப்பாற்றுகின்றான். அதனால் அவன் ஒரு தாயைப் போன்றவன். தவம் என்பது அதைச் செய்பவனுக்கு எப்படி வேண்டிய நன்மைகளைத் தருகின்றதோ அதுபோலத் தசரதன் மக்களுக்கு வேண்டிய நன்மைகளைப் புரிவதால் தவத்திற்கு ஒப்பானவன்.  பிள்ளை ஒருவன் தான் செய்யும் இறுதிச் சடங்குகளின் மூலம்  தன் தாய்தந்தையரை உயர்கதி பெறச் செய்கின்றன். அதுபோல, இம்மன்னன் நாட்டில் தீய செயல்களை ஒழித்து நல்ல செயல்கள் பெருக உதவுகின்றான்.  அதானால் அவன் ஒரு பிள்ளைக்கு ஒப்பானவன்.  மருந்து எப்படி ஒரு நோயைப் போக்குகின்றதோ அதேபோலத் தன் மக்களுக்குத் தீங்கிழைக்கும் தீயசக்திகளை மன்னன் விரைந்து அழித்து மக்களைக் காப்பாற்றுவதால் அவன் மருந்துக்கு ஒப்பானவன்.  அறிவு என்பது நுட்பமான பொருளைக்காண முற்படுவது.  தசரதச் சக்ரவர்த்தியும்  நுட்பமான நூல்களின் பொருளினை ஆராய்ந்தறிய முற்படுபவன். அதனல் அவன் அறிவுக்கு ஒப்பனாவன்,” என்று கவிச்சக்ரவர்த்தி கூறினார்.

கம்பனின் அந்தப் பாடல்:

தாய் ஒக்கும் அன்பின்; தவம் ஒக்கும் நலம் பயப்பின்;
சேய் ஒக்கும். முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்;
நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும்; நுணங்கு கேள்வி
ஆயப் புகுங்கால், அறிவு ஒக்கும்; எவர்க்கும், அன்னான்.

    (பாலகாண்டம், அரசியற்படலம் பாடல்  4, நூல் பாடல் – 172.)


இந்தப் பாடலில் தசரதச் சக்கரவர்த்தியைக் கவிச்சக்ரவர்த்தி ஒரு தாயுக்கும், பிள்ளைக்கும், மருந்திற்கும், அறிவிற்கும் ஒப்பிட்டு அயோத்தி மன்னனின் சிறப்பை வெளிப்படுத்துகின்றார்.

(உவமைகள் தொடரும்)