Pages

Showing posts with label சோலை. Show all posts
Showing posts with label சோலை. Show all posts

Tuesday, 19 January 2016

சங்க இலக்கியத் தூறல் 10 - குன்றும் கண்ணீர் சிந்துகின்றதே.....



குன்றும் கண்ணீர் சிந்துகின்றதே.....

--- அன்பு ஜெயா, சிட்னி


ஒரு தலைவனும் தலைவியும் திருமணம் ஆவதற்கு முன்பே அடிக்கடி சந்தித்து, காதல் வயப்பட்டு களவு ஒழுக்கத்தில் மூழ்கி இருந்தனர். அடுத்த நிலையான கற்பு ஒழுக்கம் என்னும் திருமண வாழ்வுக்குள் நுழைவது பற்றி முடிவு செய்யாமல் தலைவன் காலம் தள்ளிக்கொண்டே இருந்தான். இதனால் தலைவியோ மனம் தளர்ந்து, உடல் தளர்ந்து வருத்தத்தில் மூழ்கி இருக்கிறாள். இதைக்கண்ட அவளுடைய தோழி தலைவியின் துயரத்தைத் தீர்க்க என்ன வழி இருக்கிறது என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள். 




இப்படி இருக்கையில் ஒருநாள், தலைவியைக் காண்பதற்காகத் தலைவன் வேலியோரத்தில் வந்து நிற்கின்றான். இதைப் பார்த்துவிட்ட தோழி அவனைப் பார்க்காததுபோல இருந்தாள். அதேசமயம். அவளுடைய மனதில் தன் தலைவியின் மனக்கவலையை தலைவனுக்கு உறைக்குமாறு கூறி, அவனைத் திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யத் தூண்டவேண்டுமென்று முடிவுசொய்தாள். அதற்காக, தலைவனைப் பாராததுபோல் இருந்துகொண்டு, ஆனால் அவன் காதில் விழுவதுபோல தலைவியிடம் உரக்கப் பேசத் தொடங்கினாள்.
“தோழி! நாம் முற்பிறவியில் செய்த வினையின் பயனே நமக்கு எதிராக இருக்கும்போது நீ வருத்தப்பட்டு, மனம் கலங்கி, உடல் மெலிவது சரியா? வருந்தப்படாமல் இரு. நீ நல்லபடியாக நீடூழி வாழ்வாய். உன்னுடைய துன்பத்தை தலைவன் அறியும்படி அவருடைய இடத்திற்குப் போய்ச் சொல்லிவிட்டு வருவோம். என்னுடன் வா. வெண்ணிற அலைகளை உடைய கடல் நீரினால் விளைகின்ற உப்பு, மழை நீரினாலேயே  கரைந்து கெடுவதுபோல நீ ஏன் உள்ளம் உருகி நிலைகுலைந்து போயிருக்கின்றாய்? அதை நினைத்தால் எனக்கு வேதனையா இருக்கிறது. தலைவனுடைய ஊரில், எல்லா இடங்களிலும் பழவகைகள் கனிந்து உதிர்ந்துள்ள சோலைகளைக் கொண்ட, குன்று கூட தலைவன் உனக்குச் செய்த கொடுமையைக் கண்டு, தலைவன் தனக்கே செய்த கொடுமையைப் போல எண்ணி, வருத்தத்தைத் தாங்க முடியாமல் தங்கள் கண்ணீரை அருவியாகக் கொட்டுகின்ற காட்சியை நாம் அங்கு பார்க்கலாம். அப்படி உன் கவலையைக் கண்டு கல்லே கரையும்போது தலைவன் உன் கவலையைத் தீர்க்காமல் இருப்பானா?” என்று கூறி தலைவியை அழைத்துக்கொண்டு போவதற்கு தயாராவதுபோல் கூறினால்.
இந்தக் காட்சியை நல்லந்துவனார் என்ற புலவர் பின்வரும் பாடலில் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

யாம்செய் தொல்வினைக்கு எவன்பேது உற்றனை
வருந்தல் வாழி தோழி யாம்சேர்ந்து
உரைத்தனம் வருகம் எழுமதி புணர்திரைக்
கடல்விளை யமிழ்தம் பெயற்குஏற் றாஅங்கு    5
உருகி உகுதல் அஞ்சுவல் உதுக்காண்
தம்மோன் கொடுமை நம்வயின் ஏற்றி
நயம்பெரிது உடைமையின் உயங்கல் தாங்காது
கண்ணீர் அருவி யாக
அழுமே தோழிஅவர் பழமுதிர் குன்றே.

--- நல்லந்துவனார் (நற்றிணை, 88)

(பாடலின் திணை: குறிஞ்சி; துறை: சிறைப்புறமாக தோழி தலைவிக்குச் சொல்லியது)

தொல்வினை – ஊழ்வினை, எழுமதி – எழுந்துவா, கடல் விளை அமுதம் – உப்பு, உகுதல் – நிலைகுலைதல், உதுக்காண் – அதோ பார், நம்வயின் ஏற்றி – தமக்கு செய்ததாக ஏற்று, உயங்கல் – வருத்தம்.

---------------------



Thursday, 5 June 2014

கம்பனின் உவமைகள் - 11 : அகழியைச் சூழ்ந்த சோலை

கம்பனின் உவமைகளில் சில துளிகள் 11

அகழியைச் சூழ்ந்த சோலை
- அன்பு ஜெயா, சிட்னி

அயோத்தி மாநகரின் அகழியை நமக்கு அறிமுகப் படுத்தும்போது சக்கரவாள மலையைப்பற்றி அறிமுகப்படுத்தினான் கம்ப நாட்டான். அந்தச் சக்கரவாள மலை இந்தப் பூமண்டலத்தைச் சுற்றி உள்ளது என்றும், அதைச் சுற்றிப் பெருங்கடலொன்று இருப்பதைப் பற்றியும் அறிந்தோம். அந்தப் பெருங்கடலை அடுத்துப் பேரிருள் சூழ்ந்துள்ளது என்று புராணங்கள் கூறுகின்றனவாம்.

அயோத்தி மாநகரின் அகழியைச் சுற்றி அடர்ந்த காடு போன்ற சோலை ஒன்று அமைந்திருப்பதாகக் கூறுகின்றான் கம்பன். அந்தச் சோலையைப் பற்றி அவன் என்ற கூறுகின்றான் என்று கேட்போம்.



நீண்டு உயர்ந்த மதிலினால் சூழப்பட்ட அயோத்தி நகரம் பூமண்டலத்தை ஒத்து இருக்கின்றதாம். அந்நகரத்தைச் சூழ்ந்திருக்கின்ற மதில் சக்கரவாள மலையைப் போல இருக்கின்றதாம். அதைச் சுற்றி உள்ள அகழி சக்கரவாள மலையைச் சுற்றி இருக்கின்ற பெருங்கடலைப் போல இருக்கின்றதாம். அகழியைச் சூழ்ந்து உள்ள சோலை பெருங்கடலைச் சுற்றியுள்ள பேரிருளை ஒத்து உள்ளதாம்.
இந்தக் காட்சி, தூரத்திலிருந்து பார்ப்பவர்களின் கண்ணுக்குக் கருத்த நிறத்திலுள்ள மதிலைச் சூழ்ந்துள்ள சோலை, அந்தப் பொன் போன்ற மதிலுக்குத் திருஷ்டிப் பரிகாரம் செய்வதற்காகப் போர்த்தப்பட்ட (கரு)நீல ஆடையைப் போலக் காட்சி அளிக்கின்றதாகக் கூறுகின்றான் கம்பன்.

கம்பனின் அந்தப் பாடல்:

அன்ன நீள் அகன்
கிடங்கு சூழ்கிடந்த ஆழியைத்
துன்னி, வேறு சூழ்கிடந்த தூங்கு,
வீங்கு, இருட் பிழம்பு
என்னலாம், இறும்பு சூழ்கிடந்த
சோலை, எண்ணில், அப்
பொன்னின் மா மதிட்கு உடுத்த
நீல ஆடை போலுமே.
           (பாலகாண்டம், நகரப் படலம், பாடல் - 114)

தூரத்திலுருந்து பார்க்கும்போது நமக்கும் அந்தச் சோலை கருத்த நிறத்தில் தான் தெரிந்தது. அருகில் வர வரத்தான் அந்தச் சோலை, பல நிறங்களில் அழகாகத் தோன்றுகின்றது. இதையெல்லாம் தன் மனக்கண்களிலேயே கண்டுவிட்ட கம்பனின் கற்பனை வளத்தைப் போற்றுதற்குச் சொற்கள் கிடைக்கவில்லை.

(உவமைகள் தொடரும்)