Pages

Showing posts with label அயோத்தி. Show all posts
Showing posts with label அயோத்தி. Show all posts

Saturday, 24 May 2014

கம்பனின் உவமைகள் - 10 : அயோத்திய மாநகரின் அகழி

 கம்பனின் உவமைகளில் சில துளிகள்  10

அயோத்தி மாநகரின் அகழி
- அன்பு ஜெயா, சிட்னி

அயோத்தி மாநகரின் மதிலின் அருகில் செல்வதற்கு நம்மை அழைக்கிறான் கம்பன். வாருங்கள் மதிலின் அருகில் சென்று பார்ப்போம்.

இதென்ன! இந்த மதிலைச் சுற்றி இவ்வளவு அகலமான, ஆழமான, தண்ணீர் உள்ள ஓர் அமைப்பு இருக்கிறதே! பண்டைக் காலத்தில் கோட்டையின் பாதுகாப்பிற்காக அகழி என்று ஒன்றை அமைப்பார்களே அதுதானா இது!  சற்றுப் பொறுங்கள் இந்த அகழியைப் பற்றி கம்பன் என்ன சொல்கிறான் என்று பார்க்கலாம்.



- அகழி -

புராணங்களில் கூறப்பட்டுள்ள, ஏழு தீவுகளையும் சூழ்ந்துள்ள ஏழு கடல்களுக்கும் அப்பால் அவற்றையெல்லாம் சுற்றித் தன்னுள் அடக்கிச் ‘சக்கரவாள கிரி’ என்னும் மலை இருக்கின்றது. அந்த மலையைப் போலவே ஓங்கி உயர்ந்துள்ள இந்த அயோத்தி மாநகரின் மதில் உள்ளதாம். அந்தச் சக்கரவாள கிரியையும் சுற்றி எப்படி ஒரு பெருங்கடல் உள்ளதோ அதேபோல, அயோத்தி மாநகரின் மதிலைச் சுற்றி அதனுடைய அகழி அமைந்திருக்கிறதாம். விலைமகள் ஒருத்தியின் மனம், தன்னிடம் வருவோரின் செல்வம் அனைத்தையும் கவரும் எண்ணத்துடன், எவ்வளவு கீழ்மையாக இருக்குமோ அதேபோல அந்த அகழியின் ஆழம் உள்ளதாம். இழிவான பாடல்கள் போல அகழியின் தண்ணீரும் தெளிவில்லாமல் இருக்கின்றதாம். கம்பன் காலத்திலும் இப்போது வரும் சில திரைப்படப் பாடல்கள் போலச் சிலர் எழுதியிருப்பார்களோ!

மேலும் அந்த அகழி, எவரும் நெருங்க இயலாத நற்குல மங்கையரின் கற்பைப் போலப் பாதுகாப்பானதாம். அதுமட்டுமல்ல,  ஐம்பொறிகளின் வயப்பட்டுத் தீய நெறியில் செல்லும் மானிடரின் மனம் போல, அகப்பட்ட பொருளை விரைவாகக் கவ்விக்கொண்டு மற்றவர்களைத் துன்புறுத்தும் முதலைகள் பல இருக்கும் இடமாம் அந்த அகழி.

இவ்வாறு, அந்த அகழியைச் சக்கரவாள மலையைச் சுற்றியுள்ள பெருங்கடலுக்கும், அதன் ஆழத்தை விலை மகளின் மனத்திற்கும், அதில் உள்ள கலங்கலான தண்ணீரை தெளிவில்லாத இழிவான பாடலுக்கும், அகழியின் பாதுகாக்கும் திறனை நற்குல மகளிரின் கற்பிற்கும், அகழியில் உறைகின்ற முதலைகளை மானிடரின் ஐம்பொறிகளுக்கும் உவமையாகக் கூறி அயோத்தி மாநகரைச் சுற்றியுள்ள அகழியின் சிறப்பைக் கம்பன் நமக்கு உணர்த்தியுள்ளான்.

கம்பனின் அந்தப் பாடல்:

அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை
அலைகடல் சூழ்ந்தன அகழி,
பொன் விலை மகளிர் மனம் எனக் கீழ் போய்,
புன் கவி எனத் தெளிவு இன்றி,
கன்னியர் அல்குல்-தடம் என யார்க்கும்
படிவு அருங் காப்பினது ஆகி,
நல் நெறி விலக்கும் பொறி என எறியும்
கராத்தது;- நவிலலுற்றது நாம்.
 
 (பாலகாண்டம், நகரப் படலம், பாடல் - 107)

மதிலுக்கு அருகில் போகலாம் என்று நம்மை அழைத்து வந்து அதைச் சுற்றியுள்ள அகழியைப் படம் பிடித்துக் காட்டிவிட்ட கம்பனின் கவித் திறனை என்னென்று கூறுவது!

 (உவமைகள் தொடரும்)



Saturday, 17 May 2014

கம்பனின் உவமைகள் - 9 : மதிலின் மகிமை

கம்பனின் உவமைகளில் சில துளிகள் - 9

 மதிலின் மகிமை
        - அன்பு ஜெயா, சிட்னி

கோசல நாட்டு மருத நிலத்தின் அழகினையும் சிறப்பினையும் நமக்குக் காண்பித்த கம்பன், காட்டைப் பார்த்தது போதும் வாருங்கள் நாட்டைப் பார்க்கப் போகலாம் என்று, அழைக்கின்றான். வாருங்கள் அவனைத் தொடர்வோம்.

அதோ, அங்கே பிரமாண்டமாகத் தெரிகிறதே அது என்ன?, அயோத்தி மாநகரின் மதில்தானா அது. கம்ப நாட்டாரே, இவ்வளவு நீளமாக இருக்கிறதே அந்த மதில் அது எங்கே ஆரம்பித்து எங்கே முடிகிறது, அதனுடைய சிறப்பு என்ன?’ என்று கேட்டேன். அதற்குக் கம்பன் அந்த மதிலைப்பற்றி விவரித்தான்.

அந்த மதில் எங்கே ஆரம்பிக்கிறது, எங்கே முடிகிறது என்பது கண்ணுக்குத் தெரியாதபடி பரந்து இருக்கிறது. எப்படி வேதம் பல நுண்ணிய கருத்துக்களைத் தன்னுள்ளே அடக்கி, மிகப் பரந்து, எல்லை காணமுடியாதபடி இருக்கின்றதோ அதே போல இருக்கிறது. அதனால் அந்த மதில் வேதத்தை ஒத்து உள்ளது. அந்த மதில் உயரத்தில் விண்ணுலகை எட்டுவதால் தேவர்களை ஒத்து உள்ளது.
பகைவரை எதிர்கொண்டு தாக்கி அயோத்தி நகரைக் காப்பதற்காக அந்த மதில் தன் மேற்புரத்தில் பல இயந்திரப் பொறிகளை, வெளியே தெரியாதவாறு, உள்ளடக்கி வைத்திருப்பதால் புலன்களை அடக்கி வாழும் முனிவர்களை ஒத்து உள்ளது. அது அயோத்தி மக்களைக் காத்து நிற்பதால், காவல் தெய்வமாக உள்ள துர்க்கையை ஒத்திருக்கிறது. அந்த மதில் சூலம் முதலிய ஆயுதங்களை தன்னிடம் வைத்திருப்பதால் காளி தேவியை ஒத்துள்ளது. பிற அரசர்களால் அடைய முடியாதபடி இருப்பதால் அது தன் பத்தர்கள் தவிர மற்றவர்களால் அடைய முடியாத ஈசனை ஒத்திருக்கிறது. இவ்வாறு அந்த மதிலின் பெருமைகளைப் பல உவமைகளால் அவன் பாடலில் பாராட்டிக் கூறுகின்றான் கம்பன்.

கம்பனின் அந்தப் பாடல்:

“மேவ அரும் உணர்வு முடிவு இலாமையினால்
வேதமும் ஒக்கும்; விண்புகலால்,
தேவரும் ஒக்கும்; முனிவரும் ஒக்கும்,
திண் பொறி அடக்கிய செயலால்;
காவலின், கலை ஊர் கன்னியை ஒக்கும்;
சூலத்தால், காளியை ஒக்கும்;
யாவையும் ஒக்கும், பெருமையால், எய்தற்கு
அருமையால், ஈசனை ஒக்கும்.”  

(பாலகாண்டம், நகரப் படலம், பாடல் -101)


நாட்டைப் பார்க்கலாம் வாருங்கள் என்று அழைத்துவந்து நம்மை மதிலிடம் கொண்டுவந்து நிறுத்திவிட்டான் கம்பன். வேறு என்னவெல்லாம் செய்யப் போகிறான் என்று பொறுத்திருந்து பார்ப்போம் வாருங்கள்.


                              (உவமைகள் தொடரும்)