Pages

Friday, 6 February 2026

போதுமென்ற மனம் கொள்!

 

போதுமென்ற மனம் கொள்!

--- அன்பு ஜெயா

(எழு சீர் குறள்வெண் செந்துறை)

 

மனத்தினைச் சிதற விட்டிடின் அதுவும்

    மானையும் வென்றுமே ஓடும்,

மனத்தினைக் கட்டி வைத்திடின் வாழ்வும்

    மகிழ்ச்சியாய் இருக்குமே உணர்வாய்!           (1)

 

உனக்கென வேண்டும் செல்வமும் சேர்த்தே

   உள்ளமும் நிறைவினைப் பெறுவாய்

எனக்குமே இன்னும் வேண்டுமே என்றோர்

    எல்லைதான் மீறலைத் தவிர்ப்பாய்!        (2)

 

அடுத்தவர் உயர்வை அளவெனக் கொள்ளும்

    அளவிலா விருப்பமும் அழிப்பாய்!

கொடுத்தநம் இறைவன் அறிந்துமே அளித்தான்

    கொண்டிடு மனத்தினில் நிறைவே!         (3)

  

உனக்கென உரிய செல்வமும் வந்தே

    உன்னையே அடைந்திடும் அறிவாய்!

மனத்தினில் விருப்பம் பெருகவே விடாது

    மகிழ்வுடன் வாழ்கவே என்றும்!           (4)

 

போதுமே என்ற மனத்தினை வளர்த்தே

    பொன்னென வாழ்வினைப் பெறுவோம்!

ஏதுமே இலாத ஏழைகள் நலம்தான்

    இங்குமே பெற்றிட உழைப்போம்!          (5)

-------------------------

வஞ்சக ஆட்டம் துன்பமே!

 

வஞ்சக ஆட்டம் துன்பமே!

--- அன்பு ஜெயா

(பா வகை:  நாலடியால் அமைந்த இருமுச் சீரிரட்டை வியனிலைச் சிந்து.)

 

நண்பனின் துன்பத்தைக் – கண்டுமே

      நல்லுதவி புரியாதல் துன்பமே;

கண்முன் பகைவர்தம் – செருக்கினைக்

      காண்பதும் வாழ்வினில் துன்பமே;

கண்போன்ற உறவுகள் – இன்றியே

      காலம் கழித்தலும் துன்பமே;

பண்பினை இழந்துமே – பணயஆட்டம்

      பழகுவோன் வாழ்விலும் துன்பமே! (1)

 

நண்பர்கள் துயர்தனில் – தயங்காது

      நாளும் உதவிடல் வேண்டும்;

கண்களால் பகைவரின் – செருக்கினைக்

      காணாது விலகிடல் வேண்டும்;

கண்ணான உறவுகள் – நடுவிலே

      காலமும் வாழ்ந்திடல் வேண்டும்;

பண்பினைக் காத்து வாழ்வில் – என்றுமே

      பணயஆட்டம் தவிர்த்திடல் வேண்டும்! (2)

-----------------------------