Pages

Friday, 30 January 2026

சேர்ந்திணைந்து வாழ்ந்தாலே சிறப்பு - கவிதை

 

சேர்ந்திணைந்து வாழ்ந்தாலே சிறப்பு

--- அன்பு ஜெயா


(தரவு கொச்சகக் கலிப்பா)


கார்காலம் வரும்பொழுதுக் கருமுகிலும் பரவிடுமே

தேர்மீதில் வருவானே தேடியென்றன் தலைவனெனப்

பார்த்திருந்தத் தலைவிக்குப் பசலையதும் விரவிடுமே

சேர்ந்திணைந்து வாழ்வதிலே செம்மையதும் துலங்கிடுமே!        (1)

 

ஊர்கூடி இழுத்தாலே உருண்டோடும் பெருந்தேரும்

பார்போற்ற இணைந்திருந்தால் பகைதன்னை அடக்கிடலாம்

வேர்விட்டே உறவிணைந்தால் விளைந்திடுமே பெருவெற்றி

சேர்ந்திணைந்தே செலுத்தவாழ்வில் சிறப்பினையும் பெறலாமே! (2)

 

தேரோட அனைவருமே திரண்டிங்கே இழுக்கவேண்டும்

ஊரோடே ஒருமித்தே உணர்ந்துழைத்தல் சிறப்புறுமே

வேரோடிப் பயிர்வளர்ந்தால் விளைச்சலுமே பெருகிடுமே

ஊரோடு நலம்பெறவே ஒருமித்தே உழைத்திடுவோம்!           (3)

 

உரிமையினைப் அடைந்திட்டோம் ஒருங்கிணைந்துப் பொருதுமிங்கே

உரிமையினைப் பறித்திடவே ஒருக்காலும் இடமளியோம்

எரிமலையாய் வெடித்திடுவோம் எதிர்வந்தோர் நடுங்கிடவே

உரிமையுடன் இணைந்திங்கே உயர்ந்திடுவோம் அனைவருமே!     (4)

----------------------------------  

இரக்கமும் உன்னை ஏமாற்றலாம் - கவிதை

 

இரக்கமும் உன்னை ஏமாற்றலாம்.

பா வகை: எழுசீர் குறள்வெண் செந்துறை

 

இரக்கம் தானே எல்லோர் மனத்தில்

     இயல்பாய் உள்ள நற்குணமே!

பரந்து விரிந்த இயல்பைச் சிலரும்

     பண்பே இன்றி ஏய்ப்பதேனோ!    (1)

 

ஏய்ப்போர் எங்கும் இருப்பர் எனினும்

    ஏழை எளியோர் உள்ளனரே,

ஆய்ந்தே அறிவ தெப்படி என்றே

    அறிவுக் கெதுவும் எட்டவில்லை!    (2)

 

குழந்தைக் கையில் ஏந்தி நின்றே

    குறையைச் சொல்வோர் நிலைதன்னை

குழந்தை மனமும் பெற்ற மாந்தர்

    குறையாய்க் காண்ப தெங்ஙனமோ?    (3)

 

அறிவோம் இங்கே ஏய்த்தும் பிழைப்போர்

    அளவே இன்றி இருப்பாரே

அறிந்தும் இரக்கம் என்னும் உணர்வும்

   அலையாய்ப் பாய்ந்தும் வருகிறதே!        (4)

 

கல்லாய் உள்ளம் கடவுள் படைத்தால்

    கடந்தே செல்லும் வழியுண்டே

கல்லில் ஈரம் கசியப் படைத்தக்

    கடவுள் தன்னைப் பழித்திடுவோம்!        (5)

 ----------------------